"ஹெல்ப்" திட்டத்தால் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு ஆபத்து... தடுக்க வேல்முருகன் வலியுறுத்தல்!
மத்திய அரசின் ஹெல்ப் திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : மத்திய அரசின் "ஹெல்ப்" எனும் திட்டம், தமிழக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை முற்றிலுமாகவே அழித்துவிடும் என்பதால் இதனைத் தடுத்தாக வேண்டும் என தமிழக அரசையும் மக்களையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஹெல்ப் திட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : தமிழகத்தின் டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் உட்பட இந்தியாவில் மொத்தம் 30 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன், ஜெம் லெபாரட்டரீஸ் உள்ளிட்ட கார்ப்பொரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது பாஜக மோடி அரசு.
இதில் அதானி மோடியின் ஆத்ம நண்பர் என்பது எல்லோருக்குமே தெரியும்; ஜெம் லெபாரட்டரீஸ் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பியான சித்தேஸ்வராவிற்குச் சொந்தமானது.
15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய் மற்றும் 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுப்பது இவர்களின் இலக்கு. இதுபோக, இப்போது ஸ்பெஷலாக "ஹெல்ப்" எனும் பேரழிவுத் திட்டத்தின் கீழ் புதுச்சேரியின் மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை 2,40,000 ச.கி.மீ பரப்பளவு நிலம் மற்றும் கடல் பகுதிகள் "நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக" அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் கட்டமாக 4,099 ச.கி.மீ பரப்பளவில் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக 24 எண்ணெய் கிணறுகள்
கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையிலான 731 ச.கி.மீ நிலப்பகுதியில் 10 கிணறுகள். கடலூர் மாவட்டம் முதல் வேளாங்கண்ணி அடுத்து புஷ்பவனம் வரை 2574 ச.கி.மீ கடல் பகுதியில் 10 கிணறுகள். மரக்காணம் முதல் கடலூர் வரையிலான 1794 ச.கி.மீ கடல் பகுதியில் 4 கிணறுகள்.
தமிழகத்திற்கு 40 % அழிவு
இந்திய ஒன்றியம் முழுவதும் 65 கிணறுகள் என்றால் தமிழகத்தில் மட்டுமே 24 கிணறுகள். அதாவது இந்திய ஒன்றியம் சந்திக்கும் அழிவில் 40% அழிவை தமிழகம் சந்திக்கும். நிலத்தின் அடியில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருள்தான் ஹைட்ரோகார்பன். இது ஆக்ஸிஜனுடன் சேரும்போது எயந்திரங்களை இயக்கும் ஆற்றலைப் பெறுகிறது. பெட்ரோல், டீசல், நாப்தா, நிலக்கரி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வகைகளும் இந்த ஹைட்ரோகார்பனில் இருந்துதான் பிரித்தெடுக்கப்படுகிறது.
மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்
இந்த ஹைட்ரோகார்பனை உறிஞ்சி எடுப்பது அந்த நிலத்தை எதற்கும் உதவாத பாழ்நிலமாக்கிவிடும்; அதனால் மனிதர்கள் அங்கே வாழவே முடியாது போய்விடும். இதனால்தான் இதனை அழிவுத் திட்டம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். இதனைக் குறிப்பாக தமிழ்நிலத்தில் செயல்படுத்தக் காரணமே, "தமிழ் இன அடையாளத்தையே அழித்தொழிக்கும்" மோடியின் தீராத கறைதான்.
கார்ப்பரேட்டுகளுக்கு நதிகளை சொந்தமாக்கும் திட்டம்
அதனால்தான் காவிரி வாரியத்தையே அவர் அமைக்கவில்லை; அமைக்கவே மாட்டார் என்பதுதான் உண்மை. அதற்காக, எல்லா நதிகள் மீதும் டெல்லிக்கே உரிமை என்பதாக "தேசிய நதிகள் வாரியம்" என ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் நதிகள் அனைத்தையும்கூட கார்ப்பரேட்டுகளுக்குச் சொந்தமாக்கிவிடும் திட்டமும் மோடிக்கு உள்ளது.
டெல்டா மாவட்டங்கள் சேர்ப்பு
இதனால்தான் கார்ப்பரேட்டுகளின் வேட்பாளராகக் களமிறங்கிய மோடி, நாட்டையே அவர்களின் வேட்டைக்காடாக்குவதில் தீவிரமாகியிருக்கிறார். அதற்காகத்தான் "ஹெல்ப்" எனும் பேரழிவுத் திட்டத்தினையே தீட்டியிருக்கிறார். அதில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரையிலான 2,40,000 சதுர கிலோமீட்டர் பரப்பையும் சேர்த்திருக்கிறார்.
தடுக்க அரசுக்கு கோரிக்கை
இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை முற்றிலுமாகவே அழித்துவிடும். இதனைத் தடுத்தாக வேண்டும் என தமிழக அரசையும் மக்களையும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.