விவசாயிகள் பிரச்சனை தீர.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேல்முருகன் வேண்டுகோள்
போராடும் தமிழக விவசாயிகளை ஏறெடுத்தும் பாராத மத்திய அரசைத் தட்டிக் கேட்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளை பாராமலே இருக்கும் மத்திய அரசை மாநில அரசு கண்டிக்கவும் பேசவும் தயங்குகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பலமுனைத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் தமிழக விவசாயத்திற்கு பேராபத்தே காத்திருப்பதை உணரவில்லையா?
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி இறுதித் தீர்ப்பு இரண்டையுமே காலிபண்ண முயற்சிப்பதை அறியவில்லையா? வீணே இனியும் காலத்தைக் கடத்த வேண்டாம்! சேர்ந்தே நாம் மத்திய அரசைத் தட்டிக் கேட்போம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டிடுக! தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!
விவசாயி தற்கொலை
காவிரி நீர் வராமல் வான்மழையும் பெய்யாமல் கடும் வறட்சியே மிஞ்சி விவசாயம் வீழ்ந்துபட்டுப் போனது. கடன் வாங்கிச் செய்த பயிர் கருகுவதைக் காணச் சகிக்காமல் நஞ்சருந்தித் தம் உயிரையே மாய்த்துக் கொண்டனர் விவசாயிகள் பலநூறு பேர். கந்துவட்டிக்காரனைப் போல் தேசியமய வங்கிகளே கழுத்தைப் பிடித்ததனால் அவமானம் தாங்காமல் உயிரை விட்டவரும் பலபேர்.
கடன் தள்ளுபடி
எஞ்சியுள்ள விவசாயிகளாவது பிழைக்க வேண்டுமெனில் அவர்களுக்கு வறட்சி நிவாரணம் வேண்டும். வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரியில் கர்நாடகம் மேகதாது அணை கட்டாது தடுக்க வேண்டும். பாலாற்றில் ஆந்திராவும் பவானியில் கேரளாவும் தடுப்பணைகள் கட்டுவதை நிறுத்த வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு
காவிரி பாசனப் பகுதிகளில் மட்டுமல்ல வேளாண் நிலங்கள் எதிலுமே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நிலம், நீர், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் நச்சு எரிவாயுத் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது. காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
ஏறெடுத்தும் பார்க்காத பாஜக
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்திப் பார்த்தனர் விவசாயிகள். எந்தப் பலனும் இல்லாத பட்சத்தில் போராட்டக் களத்தை புதுடெல்லிக்கு மாற்றினர். அங்கும் 22 நாட்களாக போராட்டத்தைத் தொடர்கின்றனர். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் டெல்லி தயாரில்லை.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி உரிமை மீட்பு விவசாயிகளின் முதன்மைக் கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும் என்பதுதான். காவிரி தொடர்பான தாவாக்களை விசாரிப்பதற்கென்று காவிரி நதிநீர் தீர்ப்பாயம் என்ற அமைப்பு உள்ளது. அதன் மூலம்தான் காவிரி இறுதித் தீர்ப்பையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவையும் பெற முடிந்தது.
செல்லாத செயல்
ஆனால் இந்தக் காவிரி தீர்ப்பாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு, அனைத்து ஆறுகளுக்கும் சேர்த்து ஒரே தேசிய தீர்ப்பாயம் என்ற ஒன்றை அமைப்பதாகச் சொல்கிறார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி. இது அமைந்தால் காவிரி மேலாண்மை வாரியம் என்ன, காவிரி இறுதித் தீர்ப்பும்கூட செல்லாததாகிவிடும்.
குடிநீர் பஞ்சம்
இதன் மூலம் கர்நாடகத்தின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதுதான் மத்திய அரசின் நோக்கம். அதாவது தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து சொட்டு தண்ணீரும் கிடையாது. காவிரி நீரின்றி குடிநீருக்கும்கூட இப்போதே பஞ்சம் வந்துவிட்டது தமிழ்நாட்டில். நிரந்தரமாகக் காவிரி வராமலே போய்விட்டால் நிலைமை என்னாகும் யோசியுங்கள்.
எச்சரிக்கை
தமிழக அரசுக்குத்தான் இதைச் சொல்கிறோம். காத்திருக்கும் பேராபத்து உறைக்குமா தமிழக அரசுக்கு? நாட்டு நடப்புகளைப் பற்றிய நினைப்பே இல்லாமல், குட்டக் குட்டக் குனிந்து, தமிழகத்தையுமே தலைகுனியும் நிலைக்குத் தள்ளிவிட வேண்டாம் என தமிழக அரசை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிடுக! அனைவரும் சேர்ந்தே தட்டிக் கேட்போம் மத்திய அரசை! அமைத்திட வைப்போம் உடனேயே காவிரி மேலாண்மை வாரியத்தை என்று வேல்முருகன் கூறியுள்ளார்.