வேந்தர் மூவிஸ் மதன் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு... டிச. 15 வரை நீதிமன்ற காவல்
சென்னை: ஒன்பது நாட்கள் போலீஸ் காவல் முடிந்த வேந்தர் மூவிஸ் மதனுக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் அளித்து உத்தரவிடப்பட்டதை அடுத்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 6 மாதங்களாக வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாக இருந்தார். கடந்த நவம்பர் 21ம் தேதி திருப்பூரில் வைத்து தனிப்படை போலீசார் மதனை கைது செய்தனர்.
இதனையடுத்து மதனை சென்னை அழைத்து வந்த போலீசார், எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் வைத்து, தீவிர விசாரணை நடத்தினர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மதனை 9 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மதன் பதில் கூறவில்லை என்றும் சில கேள்விகளுக்கு மட்டுமே பணத்தை கொடுத்து வைத்திருப்பவர்கள் பற்றி வாய் திறந்ததாகவும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஒன்பது நாட்கள் போலீஸ் காவல் முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 15ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மதன்.
இதனிடையே மதன் வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி மாணவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.