சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: ஜெ, சசி, இளவரசியுடன் பெங்களூர் வந்தது தனி விமானம்
முதல்வர் ஜெயலலிதா உடன் சசிகலா, இளவரசியும் சென்றனர். சுதாகரனை ஜெயலலிதா எப்போதுமே உடன் சேர்ப்பது இல்லை. அவர் தனியாக நேற்றே பெங்களூர் வந்துவிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தீர்ப்பு நாளில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் சென்னை போயஸ்கார்டனில் இருந்து கார் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இருந்து தனி விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஜெயலலிதா. அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் சென்றனர்.
பெங்களூர் பழைய விமான நிலையமான ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் ஜெயலலிதாவின் சிறப்பு விமானம் தரை இறங்கியது. அங்கிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்குச் செல்லும் ஜெயலலிதா சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் 10.30 மணிக்கு அங்கிருந்து பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றம் செல்ல உள்ளனர்.
தீர்ப்பு வழங்கப்படும் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சுமார் 11 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.