ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை.. அச்சமின்றி புகார் அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன், அச்சமின்ற பிரமாண வாக்குமூலம் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முன் வர வேண்டும் என்று வலியுறுத்த
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கலைக்க போலீசார், மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் போலீசாரின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.
ஆணையம் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி
அதன்படி, விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணை ஆணையம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து மதுரை சேலம், கோவை உள்ளிட்ட வன்முறை நடைபெற்ற இடங்களுக்கு சென்று ஆணையத் தலைவர் ராஜேஷ்வரன் ஆய்வு நடத்தி வந்தார்.
சென்னை மட்டும்தான்
இந்நிலையில், சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வன்முறை நடைபெற்ற இடங்களில் சென்னையில் இருந்து மட்டுமே 128 பிரமாண வாக்குமூலங்கள் வந்துள்ளன என்று கூறினார். மேலும், மற்ற மாவட்டங்களில் இருந்து யாரும் பிரமாண வாக்குமூலத்தை அனுப்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அச்சமின்றி புகார்
பாதிக்கப்பட்ட, வன்முறையை பார்த்த நபர்கள் யாராக இருந்தாலும் மனுவாகக் கொடுக்காமல் பிரமாண வாக்குமூலங்களாக அளிக்க வேண்டும். அப்போதுதான் விசாரிக்க முடியும் என்றும் ராஜேஷ்வரன் தெரிவித்தார். அனைவரும் அச்சமின்றி பிரமாண வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இறுதி அறிக்கை
பிரமாண வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பின்னர், முழுமையான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையை 3 மாத காலத்திற்குள் தமிழக அரசுக்கு விசாரணைக் குழு சமர்ப்பிக்கும்.