திருமாவளவனுக்கு மோதிரம் கிடைச்சுருக்கு..!
சிதம்பரம்: மோதிரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று சிதம்பரம் லோக்சபா தொகுதி வேட்பாளரும், விடுதலைசிறுத்தைகள் கட்சித்தலைவருமான தொல். திருமாவளவன் வாக்கு சேகரித்து வருகிறார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், போட்டியிடுகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் நட்சத்திரம், கூடை, ஐஸ்கிரீம் ஆகிய சின்னங்களை நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. எனவே பொது சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
அவர்களுக்கு லோக்சபா தேர்தலில் மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுநாள் வரை சின்னம் எதுவும் இன்றி வாக்கு சேகரித்த திருமாவளவன் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேடு, திருவக்குளம், வாரசந்தை பகுதிகளில் சனிக்கிழமை காலை திருமாவளவன், திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் சென்று மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் மீண்டும், திமுக கூட்டணியில் நான் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழர் நலன்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற இந்த மக்கள் பேரியக்கம், 15 ஆண்டுகளாக தேர்தலை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது எனக்கூறி தனக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.
யார் பொறுப்பு?
திருமாவளவன் 5 ஆண்டுகளில் என்ன சாதித்துவிட்டார் என அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் ஜெயலலிதா 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டில்தான் முதல்வராக உள்ளார். தமிழ்நாட்டில்தான் சிதம்பரம் தொகுதி உள்ளது. சிதம்பரம் தொகுதியில் எந்த வளமும் ஏற்படவில்லை என்றால், 15 ஆண்டு காலம் முதல்வராக இருந்த ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டுமா? 5 ஆண்டுகள் உறுப்பினராக பொறுப்பேற்க வேண்டுமா? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கு சாலை போடவில்லை என்றால், திருமாவளவன் மட்டும் பொறுப்பல்ல. முதல்வரும்தான் பொறுப்பு என்றார் திருமாவளவன்.