'பாஜக' ஆளுநர்கள் பாணியில் அரசு நிர்வாகத்தை கையிலெடுக்கிறார் வித்யாசகர் ராவ்? பீதியில் சசிகலா கோஷ்டி
சென்னை: மத்திய பாஜக அரசு நியமித்த ஆளுநர்களைப் போல தமிழக பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வரும் வித்யாசாகர் ராவும் அரசு நிர்வாகங்கத்தில் தலையிட்டு குடைச்சல் கொடுப்பாரோ என்ற அச்சத்தில் அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா நடராஜன் அண்ட்கோ இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதலில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசகர் ராவ் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. ஆளுநர் வித்யாசகர் ராவும் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து இதை வலியுறுத்தியிருந்தார்.

களத்தில் வைகோ...
ஆனால் சசிகலா நடராஜன் அண்ட்கோ இதை ஏற்கவில்லை. பின்னர் மதிமுக பொதுச்செயலர் வைகோ மூலம் பொறுப்பு முதல்வரை நியமிக்க அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று ஆளுநரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆளுநர் உறுதி
பின்னர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஜெயலலிதா வசம் உள்ள பொறுப்புகளை ஒப்படைக்க அதிமுகவை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா நடராஜன் தரப்பு முயற்சித்தது. ஆனால் அமைச்சரவையில் 2-ம் இடத்தில் இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்திடமே அந்த துறைகள் ஒப்படைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசகர் ராவ் உறுதியாக இருந்தார்.

ஓபிஎஸ் வசம் துறைகள்
உடல்நலம் சற்று தேறிய முதல்வர் ஜெயலலிதாவும் தமது துறைகளை ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கவே ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதாவின் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முழுநேர ஆளுநர்
இதனிடையே தமிழகத்தின் முழுநேர ஆளுநராக வித்யாசகர் ராவ் நியமிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தஞ்சாவூர், திருச்சியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் வித்யாசகர் ராவ் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

காவிரி பிரச்சனை
இதில் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், தாம் காவிரி பிரச்சனையை தீர்க்க உதவுவேன் என கூறியுள்ளார். அத்துடன் உத்தரகாண்ட் எம்பி தருண்விஜய் பாணியில், கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க முயற்சிப்பேன்; இந்தியா முழுவதும் கல்வியில் திருக்குறளை சேர்க்க வேண்டும் என பேசியுள்ளார். தமிழகத்துடனான நெருக்கத்தை அதிகரிப்பதற்காகவே இக்கருத்துகளை ஆளுநர் வித்யாசாகர் தெரிவித்திருப்பதாகவே உணர முடிகிறது.

முடிவுகளில் தலையீடு?
தற்போது தமிழக அரசின் தலைமை வலுவானதாக இல்லாத நிலையில் முழுநேர ஆளுநராக வித்யாசகர் ராவ் நியமிக்கப்படும்போது அவரே அனைத்து அரசு முடிவுகளையும் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதையே அவரது காவிரி, திருவள்ளுவர் சிலை பேச்சுகள் உணர்த்துவதாக சசிகலா நடராஜன் தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது. பாஜகவைச் சேர்ந்த ஆளுநர்கள் இப்படி செயல்படுவது ஒன்றும் புதியதும் அல்ல.

ஆளுநர்கள் இப்படிதான்...
ஏற்கனவே டெல்லி, புதுச்சேரியில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே யுத்தமே நடந்து வருகிறது. தமிழகத்திலும் அப்படியான ஒரு நிலைமை வந்தால் தாங்கள் நினைத்தபடி அரசாங்கத்தில் எதுவுமே செய்ய முடியாதோ என்ற பீதியில் இருக்கிறதாம் சசிகலா நடராஜன் தரப்பு.












Click it and Unblock the Notifications