அடேங்கப்பா.. அமைச்சர் பி.ஏ.விடம் 3 ஆயிரம் கோடி.. விஜயபாஸ்கரை வளைக்கும் வில்லங்கம்!
ஊழல்களின் பின்புலத்தில் இருந்தவர் அபூர்வமான அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிதான். அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால், ஒட்டுமொத்த ஊழல் விவகாரங்களும் வெளியில் வரும்.
சென்னை: தமிழக சுகாதாரத்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அரசு ஒப்பந்தங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
"அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்து பட்டியலில், தங்கள் நிறுவனத்தின் மருந்து பெயரும் இடம் பெற வேண்டும் என்பதில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது வழக்கமானது. இதில், 256 மருந்து பொருட்கள் தேவைப்பட்டியலில் கொண்டு வருவதற்காக, ஒவ்வொரு மருந்துக்கும் தலா 2 லட்ச ரூபாய் என முன்பணம் பெற்றாராம் துறையின் தலைவர்.
இந்த வகையில் பல நூறு கோடி ரூபாய்கள் மிக எளிதாக அவரது கைகளுக்கு வந்து சேர்ந்தன.

கட்டிடத்திலும் ஊழல்
இதுதவிர, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டடம் கட்டியதில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. வழக்கமாக, கட்டட பணிகளை பொதுப்பணித்துறைதான் செய்து வந்தது. இந்தப் பணிகளை மருத்துவப் பணிகள் கழகத்துக்கு மாற்றிய பெருமை விஜயபாஸ்கரையே சேரும்.

நான்கு மாதத்தில் கட்டிடம்
அதேபோல், சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் அருகிலேயே பிரமாண்ட கட்டடம் ஒன்றை எழுப்பியுள்ளனர். நான்கே மாதத்தில் மொத்தக் கட்டடத்தையும் கட்டி முடித்துவிட்டனர். இந்தக் கட்டடத்தின் நிலைப்புத்தன்மை குறித்து ஆய்வு நடத்தினாலே, ஐம்பது கோடி ரூபாய் ஊழல் வெளியில் வரும்.

உயிர்காக்கும் கருவிகளிலும்..
இதுதவிர, உயிர் காக்கும் கருவிகளை வாங்குவதிலும் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்திய வசூல் வேட்டையால், பல ஒப்பந்ததாரர்கள் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். சுமார் 800 டெண்டர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஃபைல்களை கிளியர் செய்வதற்காகவே முப்பது சதவீதத்துக்கும் மேல் லஞ்சம் கேட்டனர்.

உதவியாளர் அட்டகாசம்
இந்த ஊழல்களின் பின்புலத்தில் இருந்தவர் அபூர்வமான அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிதான். அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால், ஒட்டுமொத்த ஊழல் விவகாரங்களும் வெளியில் வரும். கீதாலட்சுமியை விடவும் இந்த அதிகாரியின் செயல்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருந்தன. ஒப்பந்ததாரர்களை மிரட்டிப் பணம் பறிப்பது முதல் மருந்து கொள்முதலைக் கவனிப்பது வரையில் அனைத்தையும் செய்து வந்தவர் அமைச்சரின் முருகப் பெருமான் பெயர் கொண்ட உதவியாளர்தான்.

ரூ.3 ஆயிரம் கோடியாப்பு
அவரிடம் மட்டுமே மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் குவிந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஒருவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அந்த நபர் வலம் வருகிறார். இவரையும் அபூர்வ அதிகாரியையும் வளைத்தாலே போதும். அமைச்சரின் மொத்த ஆட்டமும் வெளியில் வந்துவிடும்" என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications