மோசடி வழக்கு.. அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரத்துக்கு 3 ஆண்டு சிறை!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: வணிக வளாகம் வாங்கியதில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், காதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 8-ந்தேதி அன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை முன்னிலையில் ஆஜராகினார். பின்னர் அவரது மனைவியிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து விஜயபாஸ்கருக்கு எதிரான ஆதாரங்களை வருமான வரித்துறை திரட்டியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கடந்த 2001-ம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரம் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வணிக வளாகம் வாங்கியதில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட அந்த வழக்கில், சுந்தரத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சுந்தரத்தின் அண்ணன் துரைசாமி தொடர்ந்த வழக்கில், தம்பிகள் சுந்தரம் மற்றும் கோபால் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே, ரூ.20,000 செலுத்தி சுந்தரம் மற்றும் தனபால் ஆகியோர் ஜாமீன் பெற்றனர்.