கர்நாடகத்தில் தமிழர்கள் அடி வாங்குகிறார்கள்.. அதிமுகவில் ஆடம்பர விழாவா? -விஜயதாரணி கொந்தளிப்பு
சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் பிரச்சினையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர். ஆனால் அதிமுகவினரோ ரோட்டை அடைத்துக் கொண்டு ஆடம்பரமாக விழா நடத்துகிறார்கள்.
தமிழகமே துக்க வீடாக உள்ள நிலையில் முதல்வர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவராக உள்ளார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கொந்தளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று 91.000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியை மாநாடு ரேஞ்சுக்கு நடத்தினர். கஞ்சா கருப்பு, சாருபாலா தொண்டமான் என பலரும் இதில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அந்தப் பகுதியே களேபரமாக காணப்பட்டது.
ராயப்பேட்டையில் நெரிசல்
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணி இந்த திடீர் போக்குவரத்து நெரிசலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காலையில் இருந்தே ராயப்பேட்டையைக் கடக்க முடியவில்லை. ஏதோ அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. விசாரித்தால், அதிமுகவில் ஒரு லட்சம் பேர் இணைகிறார்கள் என்று சொன்னார்கள்.
காவிரி பிரச்சினை
காவிரி பிரச்னையால் இரண்டு மாநிலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. எப்போது என்ன நடக்கும் எனத் தெரியாத சூழ்நிலையில், கர்நாடகாவில் தமிழக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவற்றைத் தணிப்பதற்கு என்ன மாதிரியான முயற்சிகளை முதல்வர் எடுத்துக் கொண்டிருக்கிறார்? வெறும் கடிதத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், பிரதமரை நேரில் சந்தித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பிரம்மாண்ட விழா தேவையா?
சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் வராமல் காலம் தாழ்த்தியதால், விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்குக்கூட அரசு முயற்சி எடுக்கவில்லை. இப்படியொரு துயரமான சூழலில், வாழை மர தோரணம், கொடிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிரமாண்டமாக கட்சி விழாவை நடத்துகிறது அதிமுக. இதனால், விவசாயிகள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்.
துக்கவீட்டில் கொண்டாட்டமா?
தேர்தல் பிரசாரம் போகும் இடங்களில்கூட, துக்க வீடு தென்பட்டாலே மைக்கில் பேசுவதை தவிர்த்துவிடுவோம். காவிரி விவகாரத்தால் தமிழ்நாடே துக்கவீடாக மாறிப் போயிருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் முதல்வர் கவலைப்பட்டதாகத் தெரியில்லை என்று கடும் எரிச்சலோடு கூறியுள்ளார் விஜயதாரணி.