கதிராமங்கலம் தடியடிக்கு கண்டனம்- ஓஎன்ஜிசி திட்டங்களை திணிப்பதை கைவிட விஜயகாந்த் வலியுறுத்தல்
கதிராமங்கலத்தில் போலீசார் தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணெய், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அங்கு ஓஎன்ஜிசி அமைத்த எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது.

9 பேர் கைது
பின்னர் இந்த எண்ணெய் கசிவு தீ பிடித்து எரிந்தது. ஆனால் பொதுமக்கள் தீ வைத்ததாக கூறி காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். மேலும் போராட்ட குழுவைச் சேர்ந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

2-வது நாளாக போராட்டம்
இக்கைது நடவடிக்கையைக் கண்டித்து கதிராமங்கலத்தில் இன்று 2-வது நாளாக கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே போலீசாரின் தடியடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் கண்டனம்
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், அமைதியாக போராடிய மக்களைத் தாக்குவது எந்த வகையில் நியாயம்? ஓஎன்ஜிசி திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஓஎன்ஜிசி திட்டங்களை மக்களிடம் கட்டாயமாக்காமல் கைவிட வேண்டும்.

விடுதலை செய்க
போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் கைது செய்த அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications