தேர்தல் பிரசாரத்தில் மக்கர் பண்ணும் மைக்... மறந்து போகும் விஜயகாந்த்...
மதுரை: தேர்தல் பிரசாரத்தில் ஒரே மாதிரியாக எழுதியை வாசிக்காமல், ஊருக்கு தகந்தது போல மனதில் பட்டதைப் பேசி கவர்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
பிரசாரத்தில் குடித்துவிட்டு வந்து உளறுகிறார் என்ற விமர்சனம் கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே எடுபடாமல் போனது. அதனால் இம்முறை அந்த விமர்சனத்தை யாரும் வைக்கவில்லை.
வேட்பாளரை அடித்தார். நாக்கை துறுத்துகிறார். கையை ஓங்குகிறார் என்றெல்லாம் வைக்கப்பட்ட விமர்சனத்தை இம்முறை காணவில்லை. அதனால் விஜயகாந்த் பிரசாரத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவுதான். ஆனாலும் நக்கல், நடிப்பு, நையாண்டி கலந்த பேச்சை அடிக்கடி தடுப்பது அவரது மைக்தான்.

ரத்தான பிரசாரம்
மதுரை தொகுதியில் விஜயகாந்தின் பிரசாரம் இருமுறை ரத்தானது. முதலில் ராஜ்நாத்சிங் வருகைக்காக ரத்து செய்யப்பட்டது. அடுத்து, வேன் ரிப்பேர் ஆனதால் ரத்தானது. ( தேர்தல் செலவுக்கு வைட்டமின் ‘ப' வை வேட்பாளர் கொடுக்காமல் போனதால்தான் விஜயகாந்திக்கு கோபம் என்று கூறினார்கள் எது உண்மையோ?)

அப்பாடா… அழகர் மதுரை வந்துட்டாரு…
ஒருவழியாக வேன் பிரச்சினை முடிந்து மதுரை லோக்சபா தொகுதியில் நேற்று பிரசாரம் செய்தார் விஜயாந்த். தே.மு.தி.க. வேட்பாளர் சிவ.முத்துகுமாரை ஆதரித்து மேலூர் பகுதியில், பிரசாரம் மேற்கொண்ட விஜயாந்த், மேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சாமியை போட்டு வாங்கினார்.

சாமி சரியில்லையே…
எல்லோரும் சாமிக்கு ஓட்டு போட்டீங்க... ஆனா சாமி சரியில்லையோ... நான் அந்த சாமியை சொல்லலை... உங்க எம்.எல்.ஏ சாமியைச் சொல்றேன் என்றார்.

முழிச்சிக்கங்க மக்களே!
அதிமுக எம்.பி.வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை மேயராக இருந்தப்பவே தண்ணி பிரச்சினையை தீக்கலை. இப்ப எம்.பியாக ஓட்டு கேட்டுட்டு வர்றார். மக்களே நீங்க முழிச்சுக்கணும் மக்களே!

கிரானைட் கொள்ளை
தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க அ.தி.மு.க. அரசு தவறிவிட்டது. கிரானைட் கொள்ளை மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி பிரதமரானால்
முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. முயற்சி எடுக்கவில்லை" என்று கூறிய விஜயகாந்த்,''நரேந்திர மோடி பிரதமரானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்படும், நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என்றும் கூறினார்.

மைக் சரியில்லையே…
விஜயகாந்த் பேசிக்கொண்டிருக்கும் போதே மைக் மக்கர் செய்வதால் அதை தானாகவே சரி செய்கிறார். அந்த சமயத்தில் தான் பேசவந்ததை மறந்து விடுகிறார். குறிப்புகள் இல்லாமல் பேசுவதால்தான் இந்த சிரமம் ஏற்படுகிறது. அதையே நகைச்சுவையாக கூறி சமாளித்து விடுகிறார்.

கண்ணாடியை கழற்றினால்…
விஜயகாந்த் இந்த பிரசாரத்தில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவது கண்ணாடியை கழற்றித்தான். லைட் வெளிச்சம் கண்ணை கூசச் செய்கிறது என்று கூலிங் கிளாஸ் போட்டு பேசுகிறார் விஜயகாந்த். ஆனாலும் விடாமல் விசிலடித்தாலோ... கலாட்டா செய்தாலோ... கண்ணாடி கழற்றி கூட்டத்தைப் பார்க்கிறார் விசிலடித்தவர்கள் அமைதியாகிவிடுகின்றனர். பார்வையிலேயே கூட்டத்தை கண்ட்ரோல் பண்றார் கேப்டன் என்கின்றனர் அவரது தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications