அப்பவே பிரேமா சொல்லுச்சு, நான்தான் கேக்கலை.. புதுக்கோட்டையில் வருத்தப்பட்ட 'கேப்டன்'...
புதுக்கோட்டை: கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று மனைவி பிரேமலதா கூறினார். அதை கேட்டாமல் கூட்டணி வைத்ததன் பலன் பின்னர் தான் தெரியவந்தது என்று புதுக்கோட்டையில் புலம்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
விஜயகாந்தின் மக்கள் பணி பயணம், பக்ரீத் குர்பானி என நேற்று உற்சாகமாகவே இருந்தது. புதுக்கோட்டை போன விஜயகாந்திற்கு குதிரைகளை வைத்து வரவேற்பு கொடுத்தனர்.
குழந்தைகளுக்கு மரியாதை
காலையில் பக்ரீத் பண்டிகை விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் குர்பானி வழங்கி மகிழ்ந்தார். குழந்தைகள் பேசியதையும் உற்சாகமாக கேட்டார். மதுவின் கொடுமையைப் பற்றி சிறுமி ஒருவர் பேசியதை மெய் மறந்து கேட்ட விஜயகாந்த் மடியில் வைத்து கொஞ்சினார்.
நலத்திட்ட உதவி
மாலையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனைவி பிரேமலதாவுடன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேருக்கு நேர் பேசுவேன்
ஜெயலலிதாவைப் போல் ஒருபோதும் நான் முதுவுக்குப் பின்னால் பேச மாட்டேன். தமிழகத்தில் சாதி, மதப் பேதமற்ற கட்சியாக தேமுதிக திகழ்ந்து வருகிறது. எனக்கு தெய்வமும், மக்களும் தான் இருபக்கங்கள். தமிழகத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின்வாரியத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து பல்வேறு நாளிதழ்களில் மிரட்டல் காரணமாக இச்செய்தியே வெளிவரவில்லை.
விவசாயிகள் தற்கொலை
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்ட போதும், போலீசாரின் மிரட்டலால் அவை வெளியுலகுக்கு தெரியவரவில்லை.
ஆட்சிக்கு வந்தது எப்படி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுகவால் ஆட்சிக்கு வர முடிந்தது. இல்லையென்றால், திமுக தான் ஆட்சிக்கு வந்திருக்கும்.
மனைவி சொன்னதை கேட்கலையே
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று மனைவி பிரேமலதா கூறினார். அதன் பலன் பின்னர் தான் தெரியவந்தது. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிடும் அறிவிப்புகள் பட்டை நாமம் (111) போடும் செயல்படுத்தப்படாத அறிவிப்புகளாகவே உள்ளன.
பேரைச்சொல்லி கூப்பிடுங்க
என்னைய எதிர்கட்சி தலைவர்னு சொல்றாங்க. அதான் அதுக்கான பவர் இல்லையே. என்னைய அப்படி கூப்பிட வேண்டாம். எம்எல்ஏக்கள் கூட விஜயகாந்த் அப்படின்னு பேர் சொல்லி கூப்பிடலாம் எனக்கு கவலையில்லை என்றார்.
யாருடன் கூட்டணி
2016ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதியில் அறிவிப்பேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
மாற்றுத் திறனாளிகள்
முன்னதாக 23ம் தேதி காரைக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜயகாந்த், மேடையில் மாற்றுத்திறனாளிகள் நடனமாடியதை உற்சாகத்துடன் ரசித்தார்.
பாதுகாப்பு இல்லையே
பெண் முதல்வர் ஆட்சியில் பெண் அதிகாரிக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சகாயம் எலும்புக்கூடுகள் எடுத்துள்ளார். ஆனால் இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். பாட்டி தாத்தா, சித்தப்பா எலும்புக்கூடுகள் என ஜெயலலிதா அனுப்பி விடுவார் என்றார்.
சட்டசபையில்
சட்டசபையில் எதிர்கட்சிகளே இல்லாத நிலை உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு கூட்டம் நடத்துகின்றனர். எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் வரும்போதுதான் நான் சட்டசபைக்கு செல்வேன் என்றும் கூறினார் விஜயகாந்த்.