நீலக்கலர் பட்டுடுத்தி 25வது திருமணநாளை கலக்கலாக கொண்டாடிய விஜயகாந்த்– பிரேமலதா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா உடன் 25வது திருமண நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினார். விஜயகாந்த், பிரேமலதா அவரது மகன்கள் என அனைவருமே நீல கலரில் ஆடை உடுத்தி அசத்தினர்.
விஜயகாந்த்- பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் 25வது ஆண்டு திருமணநாளை முன்னிட்டு அவர்களுக்கு, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் மற்றும் கேப்டன் டிவி நிர்வாக இயக்குனர் திரு.எல்.கே.சுதீஷ்-திருமதி.பூர்ண ஜோதி, புதுச்சேரி வெங்கடேஸ்வரா கல்விக்குழுமங்களின் தலைவர் திரு.ராமசந்திரன்-திருமதி.ராதா, திருமதி. அம்சவேணி அம்மாள் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

ஆசி பெற்ற மகன்கள்
விஜயகாந்த் பிரேமலதா தம்பதியரின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சகாப்தம் படநாயகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் தங்களின் பெற்றோரிடம் தங்கள் வாழ்த்துக்களை பெற்றனர்.

திருமணம் பிளாஸ்பேக்
மதுரைக்காரர்விஜயகாந்துக்கு மதுரையே குலுங்க 1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. கருணாநிதி தவிர விஜயகாந்தின் மனம் கவர்ந்த தலைவர் மூப்பனார், இளையராஜா, சத்யராஜ், பிரபு, எஸ்.எஸ்.சந்திசந்திரசேகர், பாண்டியன், தியாகு, தாணு, இராம.நாராயணன், பாரதிராஜா, மணிவண்ணன், எஸ்.பி.முத்துராமன், சங்கர்கணேஷ், என திரையுலக முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

கருணாநிதியின் வாழ்த்து
விஜயகாந்திற்கு திருமணம் செய்து வைத்து வாழ்த்தி பேசிய திமுக தலைவரும் அப்போதைய முதல்வருமான கருணாநிதி,
"தம்பி விஜயகாந்த் எளிமை, இனிமை ஆகிய இயல்புகளுடன் தன்னடக்கத்துடன் விளங்குகிறார். கலையுலகின் உச்சிக்குச் சென்றாலும், ஆணவம், செருக்கு, அகம்பாவம் தன்னை அணுகாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தமிழன் என்ற உணர்வு
தன்மானத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பகுத்தறிவு திருமணம் என்று தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார். கிராமம், பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்த சுயமரியாதை திருமணத்தை அண்ணா பரப்பினார். இன்று மூட நம்பிக்கையைத் தவிர்த்து தமிழனின் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது..!

சூலத்திற்கு பரிகாரம்
பஞ்சாங்கத்தை நம்புகிறவர்கள், கிழக்கே இருக்கும் ஊருக்குப் போகும்போது, கிழக்கே சூலம் என்றால் போகக் கூடாது என்று நினைப்பார்கள். பஞ்சாங்கத்தில் சிறு குறிப்பு இருக்கும். அதில் கிழக்கே சூலமாக இருந்தாலும் அதற்குப் பரிகாரமாக வெல்லத்தை சாப்பிட்டுக் கொண்டு செல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கும்.. தம்பி விஜயகாந்த் வெல்லமாக மூப்பனாரை அழைத்துள்ளார். அவர் நட்பில் வெல்லமாக இனிக்கக் கூடியவர். தஞ்சாவூர் பண்பு அது. அந்த பண்பின் அடிப்படையில் அவர் இங்கு வந்திருக்கிறார். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்று கருணாநிதி அப்போது வாழ்த்தினார்.

பாடிய இளையராஜா
திருமண விழாவில் வாழ்த்திய இளையராஜா, "இனிமேல் விஜயகாந்த், 'விரிச்சு வைச்ச பாயும், எடுத்து வைச்ச பாலும் வீணாகத்தான் போகுது.. அந்த வெள்ளி நிலாக் காயுது..' என்று பாட முடியாது என்று நினைக்கிறேன்.." என்றார்.

சுந்தரராஜன் திருமணம்
விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் பொருளாளரும், விஜயகாந்தின் நீண்ட கால நண்பருமான சுந்தர்ராஜனுக்கும் அன்றைக்குத்தான் திருமணம் நடைபெற்றது. ‘விஜயகாந்த் திருமணத்தன்றுதான் நானும் திருமணம் செய்து கொள்வேன்..' என்று சபதமெடுத்து அதன்படியே செய்தும் காட்டினார். எனவே பிரேமலதாவிற்கு தாலி கட்டிய கையோடு சுந்தரராஜன் திருமணத்திற்குப் போனார் விஜயகாந்த்.

அந்தநாள் ஞாபகம்
25 ஆண்டுகளில் விஜயகாந்த் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. திமுக தலைவர் கருணாநிதியை எதிர்ப்பதற்காகவே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். அவரது 50 ஆண்டுகால நண்பர் சுந்தரராஜன் இன்றைக்கு அவருக்கு எதிராக இருக்கிறார். இந்த நினைவுகளை அசைபோட்டவாரே தனது திருமண வெள்ளிவிழாவை உற்சாகமாக கொண்டாடினார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications