ஜெயலலிதாவை 'ஊழல்களின் முதல்வர்' என்று கூறுங்கள்: விஜயகாந்த் வீராவேசம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்துள்ளார். அவரை மக்களின் முதல்வர் என்று அழைக்கிறார்கள். அவர் ஊழல்களின் முதல்வர் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்
'தமிழகத்தில், இன்றும் விஞ்ஞான ரீதியாக, ஊழல்கள் நடந்து வருகிறது. இதை, ஆதாரபூர்வமாக கண்டுபிடிக்க, ரகசியமாக ஆட்களை நியமித்து உள்ளேன். தேவைப்படும்போது, இந்த தகவலை வெளியிடுவேன்,'' எனவும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆவின் பால் விலை உயர்வை, திரும்பப் பெற வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில், சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்ற விஜயகாந்த் தமிழக அரசையும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
குடும்ப பட்ஜெட்
ஒவ்வொரு குடும்பத்திலும், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகின்றனர். இந்நிலையில், ஒரு லிட்டர் பாலுக்கு, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது, சாதாரணமான விஷயம் அல்ல. இதன்மூலம், ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டிலும், மாதத்தில், 300 ரூபாய் அதிகரிக்கிறது.
சொத்துக்களை பறிமுதல் செய்க
ஆவின் பாலில் கலப்படம் செய்து, கோடிக்கணக்கான ரூபாய் சேர்த்த, அ.தி.மு.க., பிரமுகர் வைத்தியநாதன் சொத்தை, பறிமுதல் செய்ய வேண்டும். இதன்மூலம், ஆவின் நஷ்டத்தை ஈடுசெய்து, ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை அரசு தவிர்க்கலாம்.
முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா?
ஆவின் பால் கலப்பட விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு, தொடர்பு இருக்கிறதா என்பதை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஊழல்களின் முதல்வர்
அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது, 17 ரூபாயாக இருந்த பால் விலை, தற்போது 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு நல்லது செய்பவர்களை, மக்களின் முதல்வர் என்றால் தவறில்லை. ஜெயலலிதாவை, ஊழல்களின் முதல்வர் என்று வேண்டுமானால் கூறலாம்.
மலட்டு மாடுகள்
பால் விலையை உயர்த்திவிட்டு, நாங்கள் ஆடு, மாடுகள் கொடுக்கிறோம் என்று, அரசு கூறுகிறது. ஆனால், மலட்டு மாடுகளை, குறைந்த விலைக்கு வாங்கி, ஏழைகளுக்கு வழங்கியதாக, மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு, அரசு தரப்பில் பதில் இல்லை.
மக்கள் வெற்றி பெறுவார்கள்
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். தர்மம் என்பது மக்களை குறிக்கும், எனவே, மக்கள் மீண்டும் வெற்றிப் பெறப்போவது உறுதி.
சென்னை டூ கோடநாடு
ஆட்சி இருந்தால் சென்னையிலும், இல்லாவிட்டால், கோடநாட்டிலும் ஜெயலலிதா இருப்பார். ஆனால், நான் அப்படி இருக்க மாட்டேன். மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், சாலையில் இறங்கி போராடுவேன். மக்கள் என் பின்னால் வருவார்கள் என்ற நம்பிக்கை, எனக்கு நிறையவே உள்ளது.கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை சேர்த்த, சொத்து குவிப்பு வழக்கில் தான், ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
ரகசிய கண்காணிப்பு
இருந்தும், விஞ்ஞான ரீதியாக, இப்போதும் ஊழல்கள் நடந்து வருகிறது. யார், யாரெல்லாம் எப்படி ஊழல் செய்து சொத்து சேர்க்கிறார்கள் என்பதை, ஆட்களை வைத்து, ரகசியமாக கண்காணித்து வருகிறேன். தேவைப்படும்போது, இந்த பட்டியலை வெளியிடுவேன்.
கிரானைட் முறைகேடு
கிரானைட், தாது மணல் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு, இதுவரை அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. நேர்மையான அந்த அதிகாரி, விசாரணை நடத்தினால், அமைச்சர்கள் பலரும் சிக்குவார்கள் என்பது தான், இதற்கு காரணம்.
மீண்டும் போராடுவேன்
இந்த போராட்டங்களுக்கு பின், உயர்த்திய விலையில், இரண்டு, மூன்று ரூபாய் குறைக்க, அரசு முன்வரும்.ஆனால், ஒட்டுமொத்த விலை உயர்வையும் கைவிட வேண்டும். இல்லையென்றால், அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
குவிந்த தேமுதிகவினர்
மருத்துவ சிகிச்சை, வெளிநாட்டு பயணம் என சென்று வந்த விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பின்னர் களமிறங்கிய போராட்டம் என்பதால் ஏராளமான தேமுதிகவினர் இந்த ஆர்பாட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.