முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச பிடிக்கவில்லை... விஜயகாந்த்
தமக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச பிடிக்கவில்லை என்று விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
சேலம் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேசவே தமக்கு பிடிக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் நேற்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஏழைகளுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இரண்டாயிரம் பேருக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். விழாவில் பிரேமலதா, சுதீஷ் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய விஜயகாந்த், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையே இல்லை. எங்கு போனாலும் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று கேட்கிறார்கள்.
உண்மையில் எனக்கு எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச விருப்பமே இல்லை. அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை, சிவகாசியில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் பிரச்னை என இரண்டு முக்கிய தொழிலாளர் பிரச்னைகள் நடந்து கொண்டிருக்க அதைப் பற்றி இந்த அரசும் அதிகாரத்தில் இருப்பவர்களும் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.