கரும்பு விவசாயிகளுக்காக விழுப்புரத்தில் களமிறங்கிய விஜயகாந்த்- காரணம் தெரியுமா?
கரும்பு விவசாயிகளுக்க அரசு அறிவித்துள்ள கூடுதல் தொகையை அளிக்காத சர்க்கரை ஆலையை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசு அறிவித்த கூடுதல் தொகையைக் கொடுக்காத சர்க்கரை ஆலையையும், தமிழக அரசைக் கண்டித்தும் தேமுதிக நிரந்தரப் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணிக்குத் தலைமையேற்று 2016 சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்று படுதோல்வி கண்டபிறகு, தொண்டர்கள் துவண்டுபோயிருந்தார்கள்.
கட்சி கலகலத்து போனதை அறிந்த தேமுதிக தலைமை, கட்சி நிர்வாகிகளை அழைத்து ஊக்குவித்து, பொறுப்புகள் கொடுத்துவருகிறார்கள். மேலும், மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு, தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடவும் முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்.
டெங்கு காய்ச்சல் பிரச்சினையை கையில் எடுத்த விஜயகாந்த், மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட விஜயகாந்த், தானும், சென்னை, திருவள்ளூரில் ஆய்வு நடத்தி நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த வகையில், கரும்பு விவசாயிகளுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசு அறிவித்த கூடுதல் தொகையைக் கொடுக்காத சர்க்கரை ஆலையையும், தமிழக அரசைக் கண்டித்தும் தேமுதிக நிரந்தரப் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில், இன்று விழுப்புரத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வியடைந்தார். தனது டெபாசிட்டையும் பறிகொடுத்தார். இதனையடுத்து வட மாவட்டங்களில் இழந்த செல்வாக்கை மீட்க மீண்டும் களமிறங்கியுள்ளார் விஜயகாந்த்.
முதற்கட்டமாக கரும்பு விவசாயிகளுக்காக இன்று போராட்டம் நடத்தினார் விஜயகாந்த். அவருடன் ஏராளமான தொண்டர்களும், கரும்பு விவசாயிகளும் கையில் கரும்புடன் பங்கேற்றனர். தலையில் பச்சை துண்டு தலைப்பா கட்டி போராட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த்.