ஏன் அரசின் ஆவினை ஆதரிக்காமல்.. தனியார் பாலுக்கு வக்காலத்து வாங்குகிறார் விஜயகாந்த்?
தமிழக அரசு நிறுவனமான ஆவினை ஆதரிக்காமல் தனியார் பாலுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார் விஜயகாந்த். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் நிறுவனங்களை மிரட்டுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி குற்றம்சாட்டி வருகிறார். அவரை கிண்டல் அடித்துள்ள விஜயகாந்த் தனியார் பால் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதை ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் பால் நிறுவனத்தில் தண்ணீர் கலப்படம் செய்து குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் வழங்கப்படுவதில் பல முறைகேடுகள் நடந்தது. இதை பலமுறை தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்களுக்கு மிரட்டல்
அப்போதெல்லாம் கண் இருந்தும் குருடனாய், காது இருந்தும் செவிடராய், வாய் இருந்தும் ஊமையாய் இருந்தாரோ என மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. அப்போது செவிசாய்க்காத இந்த அதிமுக அரசு, இப்பொழுது திடீர் என்று ஞானயுதயம் வந்தது போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி தடைபெற்ற ஆதாயம் பெறுவதற்கான முயற்சியோ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆவின் ஊழல் வழக்கு
ஏற்கனவே ஆவின் பால் நிறுவனத்தில் சுமார் ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அதிமுகவை சேர்ந்த லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
முறைகேடு
ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் லாரி டெண்டர் விடுவதிலும், பால் கொள்முதல் செய்வதிலும், பால் விற்பனை செய்வதிலும் பல முறைகேடுகள் நடைபெற்றதையும், அதேபோல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், தேமுதிக எதிர்கட்சியாக இருந்த போது பால் விலை உயர்வை கண்டித்து சட்டசபையில் ஏற்பட்ட விவதாத்தை நாடறியும்.
உணவுப் பொருட்களில் கலப்படம்
பாலின் தரத்திலும், விற்பனையிலும் ஏற்படும் முறைகேடுகளை தேமுதிக எப்பொழுதும் சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பாலில் மட்டும்மல்ல அனைத்து உணவு பொருட்களிலும் ரசாயனம் கலக்கப்படுவதையும், முறைகேடுகள் நடைபெறுவதையும் தடுத்து நிறுத்தி தனியார் நிறுவனங்கள் தவறுகள் செய்து இருந்தால் அந்த நிறுவனங்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
தனியார் பாலுக்கு ஏன் வக்காலத்து?
அரசின் ஆவின் பாலுக்கு ஆதரவு தெரிவிக்காமல், மக்களின் உயிருடன் விளையாடுவதாக ஒரு அமைச்சர் குற்றம் சாட்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஏன் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார் என்பது புரியவில்லை.