கலாம் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும்! - விஜயகாந்த்
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களைக் கொண்டு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர் அப்துல் கலாம். மிக உயர்ந்த பதவி வகித்தபோதும், தான் ஒரு ஆசிரியராகவே அறியப்பட வேண்டும் என்று விரும்பியவர். தன் வாழ்நாளெல்லாம் மாணவர்களோடு கலந்துரையாடி, அவர்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கையூட்டும் வகையில் அறிவுப்பூர்வமான கருத்துகளைக் கூறிவந்தவர்.

அப்படிப்பட்ட அப்துல் கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்ததுடன், தேமுதிக சார்பில் மாணவர் தினமாக ஆண்டுதோறும் விமரிசியாகக் கொண்டாடப்படும் என்றும் தெரிவித்திருந்தேன்.
எனவே, அப்துல் கலாம் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அக்டோபர் 15-ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் அவர் உருவப்படத்துக்கு மலர் தூவி தேமுதிக சார்பில் மரியாதை செலுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு கலாமின் புத்தகங்கள் வழங்கப்படும்," என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications