டெல்லியில் தமிழக மாணவர் கொலையா? தற்கொலையா?.. விசாரணை கோருகிறார் விஜயகாந்த்
டெல்லியில் தமிழக மாணவர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: டெல்லியில் தமிழக மாணவர் உயிரிழந்தது குறித்து மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் உடனடியாக விசாரணை செய்து கொலையா, தற்கொலையா என்கிற சந்தேகத்தை பெற்றோர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் தெளிவு படுத்தவேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில், அதனால் இளைஞர்கள் இதுபோன்ற மரணங்களில் ஈடுபடாத வண்ணம் பாதுகாப்பது நமது நாட்டின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருந்த முத்துகிருஷ்ணன் என்கிற மாணவர் தலீத் சமூகத்தை சேர்ந்தவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சினைகளை சந்தித்து போராடியவன்
மாணவனுடைய பெற்றோர்கள் தங்களது மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு குடும்பத்தில் பிரச்சனைகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பலவீன மாணவனும் அல்ல, பல போராட்டங்களில் பல பிரச்சினைகளை சந்தித்து போராடியவன்.
உண்மையிலையே கண்டனத்துக்குரியது
பெற்றோர்களுக்கு கொலையா, தற்கொலையா என்கிற சந்தேகம் உள்ளது, இதே போல் டெல்லியில் ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் படித்த ரோகித் வெமுலா என்கிற மாணவனும் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்கொலை சம்பவம் நடந்து வருவது உண்மையிலையே கண்டனத்துக்குரியது.
பாதுகாப்பது நமது நாட்டின் கடமை
மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் உடனடியாக விசாரணை செய்து கொலையா, தற்கொலையா என்கிற சந்தேகத்தை பெற்றோர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் தெளிவு படுத்தவேண்டும். வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில், அதனால் இளைஞர்கள் இதுபோன்ற மரணங்களில் ஈடுபடாத வண்ணம் பாதுகாப்பது நமது நாட்டின் கடமை. இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.