3 ஆண்டெல்லாம் இல்லை... உடனே மணல் அள்ளுவதைத் தடை செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவதை உடனே நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்தை வறட்சியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னை: ஆறுகளில் மணல் அள்ளுவதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மூன்று ஆண்டுகளில் முற்றிலும் மணல் அள்ளுவதை தமிழக அரசுத் தடை செய்யும் என கூறியிருப்பது பயன் இல்லாதது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடரபாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் மணல் அள்ளுவதை தடை செய்யப்படும் என்றும், தமிழக அரசே மூன்று ஆண்டுகளுக்கு மணல் குவாரியில் இருந்து சப்ளை செய்யும் என்று அறிவித்திருப்பது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணல் கொள்ளை அடிப்பதில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்குமே முழுப்பங்கு உண்டு.
மூன்று வருடம் கழித்து தான் மணல் அள்ளுவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று சொல்லுவதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், தி.மு.க ஆட்சி காலத்திலும் மணல் கொள்ளை மிக அபரீதமாக நடந்ததன் விளைவுதான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் இல்லாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் சுமார் 400 பேருக்கு மேல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், அனைத்து ஊர்களிலும் பெண்கள் குடிதண்ணீர் இல்லாமல் சாலை மறியலில் நிற்ககூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மூன்று வருடம் மணல் அள்ளுவதை தடுத்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது வெட்டவெளிச்சமாக உள்ளது. மணலுக்கு பதிலாக எம்சண்டு உபயோகப்படுத்த வேண்டும் என்று இப்பொழுது சொல்லுவது கண்கட்ட பிறகே சூரிய நமஸ்காரம் என்கிற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் மணல் இருக்கிற பெருவாரியான இடத்தில் அள்ளி முடித்து விட்டு, முதலமைச்சர் முதல் கவுன்சிலர் வரை மணல் கொள்ளை அடித்து இன்றைக்கு தமிழகத்தையே பாலைவனமாக மாற்றிவிட்ட பிறகு நல்லவர்கள் போல் பேசுவது ஒட்டு மொத்த மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. மூன்று வருடம் கழித்து மணல் அள்ளுவதை முற்றிலும் தடுக்கப்படும் என்று சொல்வதை விட்டுவிட்டு, உடனடியாக மணல் ஆளுவதை தடுத்து, தமிழகத்தை வறட்சியில் இருந்து காப்பாற்ற வேண்டும்."
இவ்வாறு விஜயகாந்த் கூறியிருக்கிறார்.