அக்டோபர் 7ம் தேதி மனைவியுடன் தூத்துக்குடி வருகிறார் விஜயகாந்த்.. நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்
தூத்துக்குடி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் அக்டோபர் 7ம் தேதி தூத்துக்குடி வருகிறார். அங்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசவுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தேமுதிக செயலாளர்கள் சண்முகராஜா (தெற்கு), பொன்ராஜ் (வடக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளானது ''மக்களுக்கான மக்கள் பணி'' என்ற திட்டத்தின் அடிப்படையில் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி தூத்துக்குடி மாவட்ட தேமுதிக சார்பில் கட்டிடம், ஆட்டோ, மீன்பிடி, தையல், சுமை தூக்குதல், தச்சு, தீப்பெட்டி, உப்பளம், இஸ்த்திரி, விவசாயம், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.25லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 7ம் தேதி மாலை 3மணிக்கு தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகரில் நடைபெறுகிறது.
இவ்விழாவில், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவில் தேமுதிகவின் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று பேசுகின்றனர்.
எனவே இவ்விழாவில், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பித்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications