உள்ளாட்சித் தேர்தல்.. பொது வார்டு பழங்குடியினருக்கு ஒதுக்கீடு.. வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்
தூத்துக்குடி: பொது பஞ்சாயத்தை பழங்குடியினருக்கான வார்டாக மாற்றம் செய்ததை எதிர்த்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது சூளை வாய்க்கால். இதற்கான பஞ்சாயத்து பதவி பொது பிரிவினருக்கு இருந்த நிலையில், தற்போது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பஞ்சாயத்தை மீண்டும் பொது பிரிவினருக்கு மாற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பொதுபிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் செல்வபிரசாத், ஏரல் எஸ்ஐ சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் மாலை சூளைவாய்க்கால் சென்று பொதுபிரிவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சூளைவாய்க்கலை மீண்டும் பொது பிரிவினருக்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுககு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
எனினும், இரவு சூளைவாய்க்கல் பஞ்சாயத்தை பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து பொதுபிரிவினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு விடாமல் தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.