திருக்கோவிலூருக்கு மாறிய பொன்முடி... விழுப்புரம் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி இந்த முறை திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்ததத் தொகுதிக்குள்தான் இவரது சொந்த ஊர் வருகிறது என்பதும் இவர் தொகுதி மாறி வர முக்கியக் காரணம்.
விழுப்புரம் மாவட்டத்தில் திமுக பல்வேறு சமுதாயத்தினரையும் வேட்பாளர்களாக்கியுள்ளது. இவர்களில் பொன்முடி உள்பட 2 பேர் உடையார் சமுதாயத்தினர். வன்னியர்கள் உள்ளனர், தலித் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா.
பொன்முடி
முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்த முறை திருக்கோவிலூர் தொகுதியில் களம் காண்கிறார். 66 வயதான பொன்முடி, உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் எடையார் ஆகும். விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருக்கும் பொன்முடிக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
வசந்தம் கார்த்திகேயன்
ரிஷிவந்தியம் தொகுதியில் களம் காண்கிறார் கார்த்திகேயன். பிஎஸ்சி படித்துள்ள இவர் தியாகதுருகம் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இவரும் உடையார் வகுப்புதான். இவரது சொந்த ஊர் சாத்தனூர் ஆகும்.
தா.உதயசூரியன்
சங்கராபுரம் திமுக வேட்பாளர் தா.உதயசூரியன். வடக்கநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். பிஎஸ்சி படித்துள்ளார். விவசாயி.
செஞ்சி மஸ்தான்
செஞ்சி தொகுதியில் போட்டியிடுகிறார் கே.எஸ். மஸ்தான். 61 வயதான இவர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். செஞ்சி பேரூராட்சித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
கு.ராதாமணி
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார் கு.ராதாமணி. 67 வயதான இவர் எம் ஏ படித்துள்ளார். தொழில் விவசாயம். கலிஞ்சிக்குப்பம்தான் இவரது சொந்த ஊர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறார். மாவட்ட மூத்த திமுக பிரமுகர்களில் இவரும் ஒருவர். கடந்த 2011 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். திருமணம் செய்து கொள்ளாமல் கட்சிக்காக உழைத்து வருபவர்.
பெ.காமராஜ்
கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பெ.காமராஜ். 50 வயதான இவர் பிஏ படித்துள்ளார். சொந்த ஊரா் கள்ளக்குறிச்சி அருகே உள்ள க அளம்பலம் கிராமம் ஆகும். மாவட்டத் துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
இரா.மாசிலாமணி
மயிலம் தொகுதி திமுக வேட்பாளர் பெயர் இரா.மாசிலாமணி. 65 வயதாகும் சீனியர். சிங்கனூரைச் சேர்ந்தவர். இவர் ஒரு டாக்டர். மாநில தீர்மானக் குழு துணைத் தலைவராக இருக்கிறார்.
பா.சீத்தாபதி சொக்கலிங்கம்
திண்டிவனம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார் 65 வயதான பா.சீத்தாபதி சொக்கலிங்கம். இவர் ஒரு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. இவரது கணவர் சொக்கலிங்கம் ஒலக்கூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.
வானூர் (தனி)
வானூர் தனி தொகுதியில் மைதிலி ராஜேந்திரன் போட்டியிடுகிறார். 43 வயதாகும் இவர் காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். பிஎஸ்சி, எம்ஏ படித்துள்ளார். மாவட்ட கவுன்சிலராகவும், ஒன்றியக்குழு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவராகவும் இருந்து, தற்போது மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்ப்பேட்டையில் முதலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு போட்டியிடுவதைத் தொடர்ந்து அத்தொகுதியில் திமுகவே களம் இறங்கியுள்ளது. ஜி.ஆர். வசந்தவேல் களம் இறக்கப்பட்டுள்ளார். பிஇ படித்தவரான வசந்தவேலின் மனைவி குணசுந்தரி, திருநாவலூர் யூனியன் சேர்மனாக இருக்கிறார். வசந்தவேல், ஒன்றிய கழக செயலாளராகவும், திருநாவலூர் யூனியன் துணைத் தலைவராகவும் இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளார். மண்ணின் மைந்தராகவும் விளங்குகிறார்.