விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம் - ஆக. 24ல் தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் குடவரை கோவில்களில் ஒன்றானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்
கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை 10.10 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோவிலை வலம் வந்தது. இதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கான சிறப்பு பூஜையும், அங்குசதேவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்ற பின்னர் கொடி மரத்தில் வெண்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவீதி உலா
நேற்றிரவு இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் 2ம் நாளான நாளை முதல் 8ம் திருநாள் வரை ஒவ்வொரு நாளும் காலையில் உற்சவர் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.

தேரோட்டம்
திருவிழாவின் 9ஆம் நாளான வரும் 24ஆம்தேதி தேரோட்டமும், அன்றைய தினம் இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
விநாயகர் சதுர்த்தி
விழாவின் முத்தாய்ப்பாக 10ஆம் நாளன்று ஆகஸ்ட் 25ஆம்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications