விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதை முன்னிட்டு திருவள்ளூர், மானாமதுரை உள்ளிட்ட ஊர்களில் விதம் விதமான வடிவங்களில் பல வண்ண விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.
இந்த ஆண்டு செம்படம்பர் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவையொட்டி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் 3 நாள், 5 நாள், 7 நாள்கள் என வைத்து பூஜித்து, பின்னர் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாட் பவுடர் மூலம் விநாயகரை பல வடிவங்களில் வடிவமைத்து வருகின்றனர். ஒரு அடி உயரம் முதல் 8 அடி உயரம் வரை சிலைகளை வடிவமைக்கின்றனர்.
ரசாயன கலவை இல்லை
அதில் பாம்பு விநாயகர், சிவன் பார்வதியுடன் விநாயகர், மயில் வாகன விநாயகர், கருட வாகன விநாயகர் உள்ளிட்ட பல வடிவங்களில் சிலைகளை தயார் செய்து வருகின்றனர். இதற்கான வண்ணங்கள் ரசாயனக் கலவை இல்லாமல், சுற்றுச் சூழல் பாதிக்காத வண்ணங்களை பயன்படுத்துகின்றனர்.
மந்தநிலையில் விற்பனை
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஆர்டர்கள் குவியத் தொடங்கின. ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை மந்தமாக உள்ளதாக அவர்கள் கூறினர்.
மானாமதுரை சிலைகள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்தள்ளது. மானாமதுரையில் 100க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
வர்ணங்கள் பூசி
அரை அடி முதல் ஏழு அடி உயரம் வரை சிலைகள் செய்கின்றனர். சிறிய சிலைகள் அச்சில் வார்க்கப்பட்டு நிழலில் காயவைக்கப்படுகின்றன. அதன்பின் வர்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு அனுப்படுகின்றன.
நுட்பமான வேலைப்பாடுகள்
3 அடி முதல் 7 அடி வரை உள்ள சிலைகள் கையினால் நுட்பமான வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுகின்றன. கைகளில் சங்கு, சாட்டை, எழுத்தாணி, தும்பிக்கையில் மணி போன்ற பல்வேறு ஆயுதங்களுடன் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
பலவகை விநாயகர்கள்
மண்ணால் தயாரிக்கப்படும் இச்சிலைகள் நீர்நிலைகளில் எளிதில் கரையும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. அச்சுகளில் கல்யாண விநாயகர், தம்புரா விநாயகர், லட்சுமி விநாயகர், வெற்றிலை விநாயகர் என பல ரகங்கள் கடந்தாண்டு தயாரிக்கப்பட்டன.
சிம்ம வாகன விநாயகர்
இந்தாண்டு சிம்ம வாகனத்தில் விநாயகர் அமர்ந்துள்ளது போன்ற புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அடி உயரம் கொண்ட இந்த சிலையில் பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சிலைகள் 10 ரூபாயில் இருந்து உயரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.