குப்பையில் கிடந்த கரையான் அரித்த ரூ. 1000 நோட்டுக் கட்டுக்கள்... விருதுநகரில் பரபரப்பு !
விருதுநகர்: விருதுநகர் குப்பைமேட்டில் கரையான் அரித்த நிலையில் 1000 ரூபாய் நோட்டுக்கள் நான்கு பைகளில் மீட்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பை-பாஸ் ரோட்டில் உள்ள போலீஸ் பாலம் அருகே குப்பைமேடு ஒன்று உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த குப்பைமேட்டில் 1000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப் பட்டு கிடந்ததாகவும், அதனை 4 பேர் எடுத்துச் சென்றதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் ரூரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் நடத்திய ரகசிய விசாரணையில், குப்பையில் கிடந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்ற நபர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்த 1000 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய பைகளும் மீட்கப் பட்டன.
ஆனால், அவற்றில் இருந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் கரையான் அரித்த நிலையில், உபயோகப்படுத்த இயலாத நிலையில் இருந்தன. மீட்கப்பட்ட பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால், கரையான் அரித்த ரூபாய் என்பதால், அதன் மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையே, குப்பை மேட்டில் நான்கு பைகளில் மட்டுமில்லாது மேலும் அதிக பைகளில் பணம் வீசப்பட்டுக் கிடந்ததாகவும், அதனை பலர் எடுத்துச் சென்றதாகவும் தகவல் பரவியது.
எனவே, இவ்வளவு பணத்தைப் போட்டுச் சென்ற மர்மநபர் யார் ? இந்தப் பணத்தைக் கரையான் அரித்தது எப்படி ? எதற்காக அவற்றை குப்பையில் கொட்டினர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.