தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர தொண்டர்கள் பாடுபட வேண்டும்: நக்மா
சென்னை: தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை நக்மா. தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று வருகை தந்தார். அங்கு மகளிர் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன் உதாரணமாக காமராஜர் ஆட்சி இருந்தது. அமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு கக்கன் போன்றோர் உதாரணமாக இருந்தனர். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின்சாரம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் திண்டாடி வருகின்றனர். வளர்ச்சி, வேலைவாய்ப்பை பெருக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தசரா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவது பெருமையளிக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மதுக்கடைகளால் சமூகத்தில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நிறைய மதிப்புள்ளது. அதே சமயம் தமிழகத்தில் மதுவால் ஆண்கள் பலர் உயிரிழப்பதால் பெண்கள் விதவையாகி வருவது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும். வளர்ச்சி மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.