வாக்கு எந்திரத்தில் கட்சிப் பேப்பரை திணித்த வாக்காளர்... மேலூரில் வாக்குப்பதிவு தாமதம்
மேலூர்: மேலூர் வாக்குச்சாவடி ஒன்ரில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர் ஒருவர் கட்சிச் சின்னம் பொறிக்கப் பட்ட காகிதத்தை திணித்துச் சென்றதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
மேலூர் தொகுதி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளபட்டி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்காளர் ஒருவர் குறிப்பிட்ட கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட பேப்பரை திணித்து சென்று விட்டார்.
இதனால் அடுத்து வந்த வாக்காளர் வாக்களிக்க இயலவில்லை. அதனைத் தொடர்ந்து வாக்காளர் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் வாக்குப் பதிவு எந்திரத்தில் இருந்த காகிதத்தை அகற்றினர்.
பின்னர் வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அரை மணி நேரம் தாமதமாக மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
அதேபோல், வெள்ளரிப்பட்டி வாக்குச் சாவடி எண் 205-இல் வாக்காளர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பட்டனை பலமாக அழுத்தியதால், பட்டன் சேதமடைந்தது. இதனால் அடுத்து வண்டஹ்வர்கள் வாக்களிக்க இயலவில்லை. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னர் உடனடியாக மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாற்று பட்டன் கொண்டு வரப்பட்டு எந்திரம் சரி செய்யப் பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடியிலும் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.