வாக்காளர்களுக்கு பணம் தராதீர்கள் என அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தப்படும்... ஜைதி
சென்னை: ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்று அரசியல் கட்சிகளிடம் வாக்குறுதி வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என மக்களிடம் வாக்குறுதி வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் பிரச்சாரம் நடத்தப்படும். 30,000 வாக்குச்சாவடிகளில் கண்ணியுடன் இணைந்த வெப் கேமராக்கள் பொருத்தப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் தராதீர்கள் என அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தப்படும். தேர்தலில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பணம் வினியோகிக்கப்படுவதை தடுக்க புதிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
செலவினப் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தேர்தல் பறக்கும் படையில் ஒரு மத்திய அரசு அதிகாரி இருப்பார். அந்த படையில் ஒரு மத்திய அரசு அதிகாரி, சில மாநில அரசு அதிகாரிகள் இருப்பார்கள்.
பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. சில தொலைக்காட்சிகள் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக அரிசயல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கூட புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்கலாம். உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் பார்கள் மூடப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக ஐபிஎஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
துறைமுகம், விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார்.