வீர சாவர்க்கரால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த விடுதலைப் போராளி.. நவீன சிறுகதையின் தந்தை வ.வே.சு. ஐயர்!
நவீன சிறுகதையின் தந்தை வ.வே.சு. ஐயரின் நினைவு நாள்.
Recommended Video

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் வீர சவார்க்கரால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தீரமிக்க புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் 1925-ம் ஆண்டு இதேநாளில்தான் பாபநாசம் பாணதீர்த்த அருவி சுழலில் சிக்கி காலமானார். சிலர் ஜூன் 3-ந் தேதி காலமானார் எனவும் பதிவு செய்துள்ளனர்.
ஆங்கிலேயர்களை அஞ்சி நடுங்க வைத்த விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் வ.வே.சு.ஐயர். 1881-ம் ஆண்டு திருச்சி வரகனேரியில் பிறந்தார் வ.வே.சுப்பிரமணியம் ஐயர்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்ற வ.வே.சு. ஐயர், சென்னை மாகாணத்தின் முதல் மாணவராக தேர்வானார். வழக்கறிஞராக பணிபுரிந்த வ.வே.சு. ஐயர் பன்மொழி வித்தகராக திகழ்ந்தார்.

சவார்க்கரின் தளபதி
1906-ம் ஆண்டு ரங்கூனில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1907-ம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற லண்டன் சென்றார். லண்டன் இந்தியா ஹவுசில் தங்கியதால் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. இந்தியா ஹவுசில்தான் விடுதலை வீரர் வீர சவார்க்கர் போன்றோர் தங்கி இருந்தனர். அவர்கள் நடத்திய அபிநவ பாரத் சங்கத்தில் தம்மை உறுப்பினராக்கிக் கொண்டார். அங்கிருந்தபடியே பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு செய்திகளை அனுப்பி வந்தார் வ.வே.சு. ஐயர். கரிபால்டியின் சரித்திரத்தையும் ரூசோவின் ஜனசமூக ஒப்பந்தம் - ழான் ழாக் மொழிபெயர்ப்பு தொடரையும் எழுதினார் வ.வே.சு. ஐயர். அதேபோல் லண்டன் கடிதங்கள் எனும் தொடரையும் எழுதினார் ஐயர். இலக்கியச் செழுமை கொண்டவராக திகழ்ந்தார் ஐயர். மேலும் ராணுவ பயிற்சியும் பெற்றார். பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாச பிரமாணம் எடுத்து கொள்ள மறுத்தார். ஆகையால் வ.வே.சு.ஐயருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கர்சான் லில்லி படுகொலை வழக்கிலும் வ.வே.சு. ஐயருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

சவார்க்கர் அட்வைஸ்
இதனால் வீரசாவர்க்கர் அறிவுறுத்தலின்படி மாறுவேடத்தில் இந்தியாவுக்கு தப்பி வந்தார் ஐயர். புதுச்சேரியில் பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இணைந்து கொண்டார்.

இந்தியாவுக்குள் வர அனுமதி
ஆங்கிலேயர் ஒடுக்குமுறைகளில் இருந்து ஆயுதம் தாங்கிய புரட்சியால்தான் விடுதலை பெற முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவராக வ.வே.சு. ஐயர் இருந்தார். அவரிடம்தான் ஆஷ்துரை பயிற்சி பெற்றதாகவும் கூறப்படும். வ.வே.சு. ஐயரை நாடு கடத்த ஆங்கில அரசு முயற்சித்துப் பார்த்தது. ஆனால் அது நடைபெறவில்லை. முதலாவது உலகப் போருக்குப் பின்னர் இந்தியாவுக்குள் வர பிரிட்டிஷ் அரசு வ.வே.சு. ஐயருக்கு அனுமதி தந்தது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் வ.வே.சு. ஐயர். புதுவையில் 1916ல் கம்ப நிலையம் தொடங்கப்பட்டது. இந்த கம்ப நிலையம் மூலமாக ஏராளமான நூல்களை வெளியிட்டார் ஐயர்.

சிறுகதை, தொகுப்புகள்
தமிழின் முதல் சிறுகதையாக போற்றப்படும் குளத்தங்கரை ஆசிரமமும் இந்த காலத்தில்தான் வெளியானது. வ.வே.சு.ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல்- தமிழின் முதலாவது சிறுகதை தொகுப்பு.

சேரன்மாதேவி குருகுலம்
மகாத்மா காந்தியை 1919-ம் ஆண்டு சந்தித்தது முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அகிம்சாவாதியாக மாறினார். தேசபக்தன் இதழில் எழுதிய கட்டுரைக்காக பெல்லாரியில் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்தார். காங்கிரஸ் கட்சியின் நிதி உதவியுடன் 1922-ம் ஆண்டு சேரன்மாதேவியில் குருகுலத்தை நடத்தினார் வ.வே.சு. ஐயர்.

சேரன்மாதேவி குருகுல சர்ச்சை
இக்குருகுலத்தில் ஜாதிய வேறுபாடு பார்க்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் வ.வே.சு.ஐயருக்கும் காங்கிரஸ் செயலாளராக இருந்த பெரியார் ஈ.வே.ராவுக்கும் இடையே உச்சகட்ட மோதல் கூட நடைபெற்றது. அப்போது, தமக்கு நிதி அளிப்பவர்கள் ஆசாரம் கெடக் கூடாது என்கிற நிபந்தனைகளை விதித்தனர். இருந்தபோதும் காலப்போக்கில் இந்த வேறுபாடுகள் மாற்றப்படும். தாம் சகமாணவர்களுடனேயே அமர்ந்து சாப்பிடுகிறேன். நான் போய் ஜாதிய வேறுபாட்டை கடைபிடிப்பேனா? என வ.வே.சு.ஐயர் கேள்வி எழுப்பினார். ஆனாலும் காங்கிரஸ் நிதியை வ.வே.சு.ஐயருக்கு பெரியார் தரவிடவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக இருந்தது. காந்தியடிகளும் கூட இதில் தலையிட்டு விளக்கம் கேட்டிருந்தார்.

பாண தீர்த்த அருவியில் மரணம்
பின்னர் பொதுமக்களிடம் நிதி வசூலித்தார் வ.வே.சு.ஐயர். 1925-ம் ஆண்டு பாபநாசம் பாணபத்திர அருவிக்கு குருகுல மாணவர்களுடன் சுற்றுலா சென்றார் ஐயர். அங்கு மகள் சுபத்திரா அருவியை கடக்கும் போது தவறி விழுந்து விட்டார். அவரை காப்பாற்ற முயன்ற போது சுழலில் சிக்கினார் ஐயர். இருவரது உடல்களுமே கிடைக்காமல் போனது. அப்போது அவருக்கு வயது 44. வ.வே.சு. ஐயரின் அகால மரணம் தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இல்லையெனில் இன்னமும் ஏராளமான சரித்திர இலக்கியங்களை அவர் படைத்திருப்பார் என்பதுதான் நிதர்சனம்












Click it and Unblock the Notifications