சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. கேன் விற்பனை அதிரடி உயர்வு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடி தண்ணீர் கேன் விற்பனை அதிகரித்துள்ளது.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இதனால் தண்ணீர் கேன்களின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பருவமழையும் பொய்த்துப் போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போயுள்ளன. போரூர் எரி உள்ளிட்ட ஒரு சில ஏரிகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது.
வெயிலால் ஆவியாகும் நீர்
அதுவும் அடித்து வெளுக்கும் வெயிலால் வேகமாக ஆவியாகிவிடும் என அஞ்சப்படுகிறது. இதனால் எஞ்சியுள்ள கோடைக்காலத்தில் சென்னையில் தண்ணீர் பிரச்சனை பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
குழாய்களில் தண்ணீர் நிறுத்தம்
சென்னை நகரில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் குழாய்களில் பலவற்றில் இப்போதே தண்ணீர் வரவில்லை. அதற்கு பதிலாக லாரிகளில் வந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடி லாரிகளில் தண்ணீர் வழங்கப்படுகிறது.
லாரியை சூழும் மக்கள்
இதனால் லாரி தண்ணீரை பொதுமக்கள் போட்டி போட்டு பிடிக்கின்றனர். குறைந்த அளவிலேயே தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால் அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை.
கேன் விற்பனை அதிகரிப்பு
இதனால் பலர் தண்ணீர் கேன்களையே வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது. காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் இதே நிலையே தொடர்கிறது.
இதனால் 3 மாவட்டங்களிலும் தண்ணீர் கேன் விற்பனை அதிகரித்து உள்ளது.
கூடுதல் கேன்கள் விற்பனை
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் இதுவரை தினமும் 10 லட்சம் தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது 1 லட்சம் கேன்கள் கூடுதலாக விற்பனையாவதாக தண்ணீர் கேன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகரிக்கும் - எதிர்பார்ப்பு
இன்னும் 75 நாட்களுக்கு மேல் கோடை காலம் உள்ளது. இப்போதே பல குழாய்களில் தண்ணீர் வராததால் கேன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என கேன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
உறிஞ்சும் தனியார் நிறுவனங்கள்
இதற்கிடையே செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சியிலும் தனியார் நிறுவனங்கள் ராட்சத மின்மோட்டார்கள் அமைத்து தண்ணீரை உறிஞ்சி விடுவதால், ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதன்காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.