மேட்டூர் அணை நீர் மட்டம் 55.89 அடியாக உயர்வு: ஒகேனக்கல் அருவியில் வெள்ளம்
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 9 அடி உயர்ந்துள்ளது. அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. கபிணி அணை நிரம்பி வழிகிறது இதனை அடுத்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 3 நாட்களில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 8 அடி உயர்ந்து தற்போதிய நிலவரப்படி 56 அடியாக உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக காவிரி பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வினாடிக்கு 23,000 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணை விரைவில் நிரம்பும்
மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 21.72 டிஎம்சியாகவும், நீர் வெளியேற்றம் 800 கன அடியாகவும் உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் அருவியில் வெள்ளம்
கபிணி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளமாக கொட்டுவதால் 4வது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
பரிசலுக்குத் தடை
ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக இருந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரிக்கும்
நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. எனவே, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.
பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், பரிசல் ஓட்டிகளும் பரிசல்களை இயக்கவில்லை.
வெள்ள அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல் அருகேயுள்ள காமராஜ் நகர், ஊட்டமலை உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நான்காவது நாளாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.