வெறுங்கையோடு போனதால் விரட்டப்பட்ட அமைச்சர்கள் இன்று நிவாரணப் பொருட்களுடன் ஆர்.கே.நகரில்...
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே.நகரில் வெறுங்கையோடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச் சென்றதால் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேற்று விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் மக்களின் கோபத்தை தணிக்க இன்று அதே பகுதிக்கு ஏராளமான நிவாரணப் பொருட்களுடன் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.
சென்னையில் வெள்ளம் மிக மோசமான பாதித்த பகுதிகளில் வடசென்னையின் ஆர்.கே.நகரும் ஒன்று. இப்பகுதியில் பல அடி உயரத்துக்கு வெள்ளநீர் தேங்கியிருந்தது.
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் இப்பகுதியில் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ ஆகிய 3 அமைச்சர்கள் நேற்று பார்வையிட வந்தனர். ஆனால் பெருங்கோபத்தில் இருந்த மக்கள் அமைச்சர்களை மடக்கி மிகக் கடுமையான கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உச்சகட்டமாக அப்பகுதியைச் சேர்ந்த வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளரான வெற்றிவேலுக்கு சரமாரி அடியும் விழுந்தது. பொதுமக்கள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வெள்ளநீரில் நடக்குமாறு நிர்பந்தித்தனர்.
ஒருகட்டத்தில் என்னால் முடியாது என்று கூறிவிட்டு சக அமைச்சர்களுடன் நத்தம் விஸ்வநாதன், பொதுமக்களின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிவந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் வண்டி நிறைய வெள்ள நிவாரணப் பொருட்களுடன் அதே ஆர்.கே.நகர் பகுதிக்கு அமைச்சர்கள் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்றனர். இருப்பினும் எல்லாவற்றையும் இழந்த மக்கள் குமுறலோடுதான் நிவாரணப் பொருட்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் திருவொற்றியூர் பகுதியில் நிவாரண உதவிகளை இன்று வழங்கினார்.