நெல்லையில் இடிந்து விழுந்த குடிநீர் தொட்டி... அச்சத்தில் ஓடிய கிராமமக்கள்
நெல்லையில் மணல் விளை கிராமத்தில் தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்தது.
நெல்லை: நெல்லையில் குடிநீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்ததால் பொது மக்கள் பதறிய ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கந்தாண்பாறை அருகே மணல்விளை கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் பஞ்சாயத்து சார்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளாக போராடி வந்ததால் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த தொட்டி கட்டி ஆண்டு 2007 என்று கூறுகின்றனர்.
இந்த தொட்டி சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த தொட்டியில் இருந்து தான் இந்த கிராமத்திற்கும் சுற்று புற கிராமத்திற்கும் குடிநீர் வினியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொட்டி கான்கீரிட் பெயர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து பொது மக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை.
தொட்டி பலமில்லாமல் காணப்பட்டதால் பொது மக்கள் அதன் அருகே செல்லவே பயப்பட்டு வந்தனர். இந்நிலையில் இரவு திடீரென தொட்டியில் நீர் நிரம்பியதால் பாரம் தாங்காமல் பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தூரமாக ஓட்டம் பிடித்தனர். இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தொட்டியில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஆறாக பெருக்கெடித்து ஓடியது. இந்த தகவலை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் வந்து பார்க்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்கள் கூறுகையில் தொட்டி உடைந்து விட்டதால் இனி குடிநீருக்காக பக்கத்து ஊருக்கு தான் போக வேண்டும் என வேதனைப்பட்டனர்.