'அம்மா' இடத்தில் சசிகலாவா.. ஏற்க மாட்டோம்.. போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர்கள் மறியல்
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீடு முன்பு தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: உடல் நிலை பாதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு உயிரிழந்தார். அவரது மறைவை தொடர்ந்து நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அன்று இரவே முதல்வராக பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில் தற்போது அதிமுகவை வழிநடத்த எவரும் இல்லை என்றும், அதனால் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஏற்கவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று போயஸ் கார்டன் சென்ற அதிமுக நிர்வாகிகள் மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுகவின் மையப்புள்ளியாக சசிகலா செயல்பட வேண்டும் என்றும் மூத்த அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பின்னி சாலையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் தோட்டத்தில் மறியல் செய்தனர்.
அம்மாதான் நிரந்தர பொதுச்செயலாளர் அவருக்கு மாற்றாக சசிகலாவை ஏற்கமாட்டோம் என்று தொண்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. அம்மா உயிரிழந்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது ஏன் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற சசிகலா காய் நகர்த்தினாலும் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பு சசிகலாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனையடுத்து அமைச்சர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.