ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை: ஓ.பி.எஸ்.
சென்னை: கூட்டத்தொடர் பற்றி ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதை கண்டித்து தமிழக மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் தொலைபேசியில் பேசியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் விவகாரம் பற்றி திமுக பொருளாளர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின்
தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுவிக்கவும் தமிழக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் ஸ்டாலின்.
ஓ.பி.எஸ்.
ஸ்டாலின் கருத்து தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சட்டமன்ற கூட்டத்தொடரை எப்போது கூட்ட வேண்டும் என்பது அரசுக்கு தெரியும். கூட்டத்தொடர் பற்றி ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
திமுக
பேரவையில் பொய் குற்றச்சாட்டுகளை அடுக்குவது, குந்தகம் விளைவிப்பது திமுகவின் வரலாறு. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் நிறைவேறாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
சூடு, சொரணை
ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டதால் அவரது தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிப்பதில் என்ன கஷ்டம். தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணையே இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.