எல்லோரும் எங்களைப் பார்த்து வியக்கிறார்கள்.. ஞானதேசிகன் சந்தோஷம்
சென்னை: எங்களைப் பார்த்து ஏளனம் செய்தோர் தற்போது எங்களது கட்சித் தொண்டர்களின் எழுச்சியைப் பார்த்து வியந்து நிற்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை (21 ஆம் தேதி) ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.
காலை புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரை வந்து பிறகு மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சரியாக 11 மணிக்கு ராமநாதபுரத்திற்கு வந்தடைந்து உரையாற்றுகிறார்.
நமது கட்சியில் தோழர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது காங்கிரஸ் கட்சியை எள்ளி நகையாடியவர்கள், ஏளனம் பேசியவர்கள், தமிழக அரசியல் களத்தில் நம்மை ஒரு பொருட்டாக மதிக்காதவர்கள் இன்று காங்கிரஸ் தொண்டர்களுடைய வீறு கொண்ட எழுச்சியை தேர்தல் களத்தில் பார்க்கிறபோது வியப்படைகிறார்கள்.
நம்மை பார்த்து துரோகம் செய்தவர்கள் என்று ஒரு கட்சியின் தலைவர் குற்றம் சாட்டினார். இன்னொருவரோ காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிய வேண்டும். டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றார். குழப்பவாதிகளின் கூடாரமாக திகழ்கிற பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் மத்தியில் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் தன்மானத்தை காக்க களமிறங்கியிருக்கிற காங்கிரஸ் தொண்டர்களை பார்த்து தலை வணங்குகிறேன்.
இருப்பதோ இடையில் 5 நாள். நம்முடைய உற்சாகம் தளராமல் உத்வேகம் மங்காமல் சோர்விற்கு விடைகொடுத்து அயராது உழைத்து வெற்றிக்கனியை பறிக்க பாடுபடுவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கிறது. வரலாற்றை படைக்க உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்ற செய்தியை சொல்ல ராமநாதபுரம் நகரில் கூடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாலும கூட ஞானதேசிகன் எத்தனைத் தொகுதிகளுக்குப் போய் பிரசாரம் செய்தார் என்ற விவரமே இதுவரை முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.