8 அமைச்சர்கள் உட்பட 60 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்தான்.. திவாகரன் பேட்டி
எங்களுக்கு 8 அமைச்சர்கள் உள்பட 60 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.
மன்னார்குடி: எங்களுக்கு 8 அமைச்சர்கள் உள்பட 60 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது என்றும் ஓரிரு நாள்களில் அவர் எங்கள் பக்கம் வருவர் என்றும் மன்னார்குடியில் திவாகரன் தெரிவித்தார்.
கட்சித் தலைமைக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கியதாக தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் கொறடாவின் புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தினகரன் தரப்புக்கு மேலும் 2 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
திவாகரன் கருத்து
இதுகுறித்து மன்னார்குடியில் சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சபாநாயகருக்கு கொறடா ராஜேந்திரன் அனுப்பியுள்ள கடிதத்தில் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கைப்பாவை
அவர் யாருடைய கைப்பாவையாகவோ செயல்படுகிறார். கர்நாடகாவில் இதே போன்று எடியூரப்பா ஆட்சியை கவிழ்க்க அங்குள்ள எம்எல்ஏக்களை சபாநாயகர் விளக்கம் கேட்டு நீக்கினார். ஆனால் நீதிமன்றமோ ஒரு எம்எல்ஏக்கு அவர்களின் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை எவ்வாறு உள்ளதோ அதே போன்று அவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது அவர்களை அப் பதவியில் இருந்து இறக்குவதற்காக எடுக்கக் கூடிய நடவடிக்கையும் சரியே என்று கூறியது.
8 அமைச்சர்கள் ஆதரவு
தமிழகத்தில் சபாநாயகரிடம் இருந்து விளக்கம் கேட்டு 19 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் வந்தால் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதை இணைத்து கடிதம் எழுதுவோம். இன்றைய நிலையில் 8 அமைச்சர்கள் உள்பட 60 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அவர்கள் 2 நாட்களில் எங்களிடம் வருவார்கள். போக போக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். தனபாலை முதல்-அமைச்சராக ஆக்க வேண்டும் என்கிற முடிவுக்கு அனைவருமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பயப்படுகிறார் எடப்பாடி
எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்திக்க பயப்படுகிறார். அவரது அமைச்சரவையில் ஊழல் செய்த 5 அமைச்சர்களுக்கு எதிராக செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டு விடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம். தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் மந்த நிலையை போக்க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நியாயமான வழியில் செயல்பட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார் அவர்.