"கூட்டணிக்கு தலைமை நாங்கதான்.. நான் எடுப்பதுதான் இறுதி முடிவு".. போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
கடலூர்: "அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. 'ஓரணியில் தமிழ்நாடு" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னதாகவே அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இருகட்சி தொண்டர்களும் களத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பது கிடையாது, எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார்; கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது. நான் தான் தெளிவாக கூறி வருகிறேனே.. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது எங்கள் உரிமை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை. அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன்.
அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அதன் பிறகு ஆட்சியில் பங்கு குறித்து கேளுங்கள். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு. பாஜக உடன் நாங்கள் கூட்டணி வைத்ததுமே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications