தமிழக வாக்காளர்கள் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்?- exclusive
-ஜெயலட்சுமி
லஞ்ச ஊழலற்ற, நிலையான அரசு வேண்டும் என்று சென்னை வாக்காளர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
ஒரு சிலரோ மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 ஆண்டுக்கு ஒருமுறை நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. இன்று ஏப்ரல் 7ம் தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 24ம் தேதிதான் வாக்குப்பதிவு என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 5முனை போட்டியில் சிக்கியுள்ள தமிழகத்தில் பலரது ஓட்டும் மாநிலக்கட்சிகளுக்குத்தான் என்றாலும், மத்தியில் நிலையான ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளனர்.
மூத்த குடிமக்கள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை கேட்டதில் பலரது கருத்தும் ஊழல் ஆட்சிக்கு எதிரானதாகவே இருக்கிறது. அதே சமயம் நிலையான அரசு அமையவேண்டும் என்பதிலும் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.
நேர்மையான அரசியல்வாதி…
பெயர்: சாருஹாசன்
வயது : 84
தொழில்: திரைப்பட நடிகர்
கோரிக்கை: இதுவரை எதற்காகவும், லஞ்சம் கொடுத்ததும் இல்லை,வாங்கியதும் இல்லை. நேர்மையானவருக்கே என் வாக்கினை பதிவு செய்வேன். ஊழலற்ற அரசு அமையவேண்டும் என்று நினைக்கிறேன்.
அம்மாதான் பிரதமர்
பெயர் : செல்லப்பன்
வயது: 48
தொழில்: இளநீர் விற்பனையாளர்
கோரிக்கை:
எல்லாம் லஞ்ச, ஊழலா போயிருச்சு... என் ஓட்டு இரட்டை இலைக்குத்தான்... அம்மா பிரதமரானா மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.
மதசார்பற்ற அரசு
பெயர்: ஏழுமலை
வயது: 63
தொழில்: டீக்கடை
கோரிக்கை: மதசார்பற்ற, நிலையான அரசு அமைய வேண்டும். அது காங்கிரசால்தான் முடியும்
மக்களுக்கு நன்மை செய்யும் அரசு
பெயர் : சபீயுல்லா
வயது : 33
தொழில்: அரபு பள்ளி ஆசிரியர்
கோரிக்கை: காங்கிரஸ் ஆண்ட 10 வருடத்தில் லஞ்ச, ஊழல் அதிகரித்து விட்டது. மோடி வருத்தம் தெரிவித்துவிட்டார். திருந்தி மன்னிப்பு கேட்பவங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை. மக்களுக்கு நன்மை செய்யும் அரசு அமையவேண்டும்.
ஊழலற்ற அரசு வேண்டும்
பெயர் : ரமணன்
வயது : 30
படிப்பு, தொழில்: எம்.பி.ஏ, ஐ.டி நிறுவன அலுவலர்
எதிர்பார்ப்பு:
பத்தாண்டுகால ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. ஒரு பாதுகாப்பற்ற தன்மைதான் நிலவுகிறது. விலைவாசி உயர்வு, எதிலும் கட்டுப்பாடற்ற தன்மைதான் நிலவுகிறது. எனவே ஊழலற்ற அரசு அமையவேண்டும். அது மோடி தலைமையிலான அரசாக இருந்தால் நன்றாக இருக்கும்.
இரட்டை இலைக்கே என் ஓட்டு
பெயர்: தேசப்பன்
வயது: 63
தொழில்: மீனவர்
கோரிக்கை: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராகவேண்டும். அதிமுக தொடங்கியதில் இருந்து இதுவரைக்கும் இரட்டை இலை தவிர வேறு யாருக்கும் ஓட்டு போட்டதில்லை. அம்மாவால்தான் சிறந்த அரசை கொடுக்க முடியும்.
பெண்களுக்கு பாதுகாப்பு தரும் அரசு
அபிநயா வயது 26
பிரசன்ன வயது 30
நளினி வயது 35
இல்லத்தரசிகள்
கோரிக்கை: நாட்டில் கொலை, கொள்ளை, பலாத்காரம் பெருகிவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு தரும் அரசு அமையவேண்டும் என்பது விருப்பம்.
ஏழைகளை காக்கும் அரசு
பெயர்: ஜெயராமன்
வயது : 72
தொழில் : கீரை வியாபாரம்
கோரிக்கை: ஏழைகளுக்கு நன்மை செய்யக்கூடிய அரசு வரவேண்டும். தமிழ்நாட்டைப் போல நல்ல ஆட்சி வந்தா நல்லா இருக்கும்.
நிலையான, ஊழலற்ற அரசு
பெயர்: பவன்
வயது: 40
தொழில் : பல் டாக்டர்
எதிர்பார்ப்பு:
நிலையான ஊழலற்ற அரசு அமையவேண்டும்.
ஜெயலலிதா ஆட்சி அமைந்தால் நல்லது
பெயர்: செல்வி கீர்த்தனா
வயது : 29
இல்லத்தரசி
கோரிக்கை: இப்ப மூணாவது முறையா ஓட்டு போடப்போறேன். தமிழ்நாடு மாதிரி மத்தியிலும், ஜெயலலிதா ஆட்சி அமைந்தால் நல்லது. அவங்க பிரதமரானா எங்களுக்கு ரொம்ப நல்லது. .
பாதுகாப்பான அரசு வேணும்
பெயர் : மெகர்பான்
வயது: 52
தொழில்: மளிகைக்கடை
கோரிக்கை: பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை. எங்களுக்கு பாதுகாப்பினை கொடுப்பது காங்கிரஸ் அரசாங்கம்தான்.
வயதானவர்களுக்கு பாதுகாப்பு
பெயர்: பேபி
வயது : 70
இல்லத்தரசி
எதிர்பார்ப்பு: ஏழைகள், வயசானவங்களுக்கு ஏற்ற அரசாங்கம் வந்தா நல்லா இருக்கும்.