இன்றைய அரசியலை கூர்ந்து கவனிக்கிறோம்... விரைவில் மக்கள் விரும்பும் முடிவு அறிவிப்பு- ஓபிஎஸ்
அதிமுக அணிகள் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணி டிடிவி தினகரனை கட்சியைவிட்டு நீக்கியுள்ளது.
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என டெல்லி புறப்படும் முன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், தமிழக அரசியல் சூழ்நிலையைக் கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்தது சட்டவிரோதம் என்பது உள்ளிட்ட தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து அதிமுகவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தன்னை நீக்கியது குறித்து கருத்துத் தெரிவித்த டிடிவி தினகரன் என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சசிகலாவுக்கு மட்டுமே உண்டு என்றும் பழனிச்சாமி நீக்கியது செல்லாது என்றும் கூறி அதிர்வுகளை ஏற்படுத்தினார்.
இந்த அந்நிலையில் அணிகள் இணைப்புக் குறித்தும், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸ், " அரசியல் சூழ்நிலைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.
கூடிய விரைவில் உரிய முடிவு அறிவிக்கப்படும். மக்கள் எதிர்பார்க்கும் முடிவாகவும், அதிமுக தொண்டர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும். அது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி அணி நாங்கள் கூறியதில் பாதி வந்துவிட்டார்கள். மீதியும் வரட்டும் " என்று தெரிவித்துள்ளார்.