ஸ்ரீரங்கம்: 2 நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பெயர் அறிவிப்பு – தமிழிசை
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுவது உறுதி என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். வேட்பாளர் யார் என்பதை இன்னும் இரு தினங்களில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் என்று இதுநாள்வரை கூறிவந்த தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து பேசிய பின்னர் முதன் முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்குள் இருக்கும் எந்த கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பதை கூட்டணி கட்சி தலைவர்களுடனும், எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடனும் கலந்து ஆலோசிப்போம். வேட்பாளர் யார் என்பதை இரண்டு நாட்களில் அறிவிப்போம் என்றும் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப் படுகிறது. மாநிலத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 27-ம் தேதியுடன் முடிகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேமுதிகவும் வேட்பாளரை நிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர் பகுதிகளில் தேமுதிகவுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அதனால்தான் கட்சியின் தலைமை நிலையச்செயலாளர் பார்த்தசாரதியை திருச்சிக்கு அனுப்பி விஜயகாந்த் ஆய்வு மேற்கொண்டார்.
தேமுதிக சார்பில் வேட்பாளரை அறிவிப்பதற்காக மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜ் உட்பட 6 பேர் கொண்ட பரிந்துரைபட்டியலும் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திமுக, அதிமுக சார்பில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடக்கிறது என்றனர்.
இடைத் தேர்தலில் பணபலம்தான் பெரிய அளவில் வேலை செய்யும். இன்றைக்கும் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஸ்ரீரங்கத்தில் இருந்து வார்டு வாரியாக தேர்தல் பணி செய்து வருகின்றனர். இது பாஜகவினரை யோசிக்க வைத்துள்ளது. டெல்லியிலும் தேர்தல் நடப்பதால் தமிழக பாஜக தலைவர்கள் அங்கு சென்று தமிழர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதனால், ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவதற்கு பாஜக தயக்கம் காட்டிவருகிறது.எனவே தேமுதிகவிற்கு பாஜக ஆதரவு தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.