இடதுசாரிகளுக்கு 'ஸாரி' சொல்ல மாட்டோம்.. வரலாம்- கருணாநிதி
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்ளது கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்று, ஸாரி என்று சொல்ல மாட்டோம். அவர்கள் தரப்பிலிருந்து இன்னும் யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. பத்திரிக்கை வாயிலாகத்தான் வரக்கூடும் என்று செய்திகள் வெளியாகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதன் மூலம், அதிமுகவால் கைவிடப்பட்ட இடதுசாரி கட்சிகளுக்கு திமுக இன்னும் கதவைத் திறந்து வைத்திருக்கிறது என்பதை கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.
திமுகவின் வேட்பாளர் பட்டியலை இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்ட கருணாநிதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவரது பேட்டி மற்றும் பேச்சு...
அனைவரும் வெல்வர்
இந்த பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் வெற்றி வாகை சூடுவார்கள். திமுக தொடக்கத்தில் இருந்து இதுவரை ஜனநாயக முறைப்படி நடைபோடுகிற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தின் சார்பில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளேன். இன்னும் ஒன்றிரண்டு வேட்பாளர்கள் இடம் பெற வேண்டிய அளவில் உங்கள் முன்பு இந்த பட்டியல் வைக்கப்படுகிறது.
சில ஏடுகள் விருப்பம் போல...
இந்த பட்டியல் வெளியாகி உள்ள காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சில ஏடுகள் அவர்களது விருப்பம் போல், ஆசைப்படி எந்தெந்த கட்சிகள் இதில் இடம் பெறும் என்று அவர்களது ஆசைக்கும் யூகத்துக்கும் ஏற்ப வெளியிடுவார்கள்.
முழுமையான பட்டியல் அல்ல
இது முற்றிலும் முழுமையான பட்டியல் என்று சொல்லமாட்டேன். ஒன்றிரண்டு திருத்தங்கள் வரும். அப்படி திருத்தங்கள் வரும்போது இந்த பட்டியலில் அதை இணைக்க கூடும்.
தோழமைக் கட்சிகளுக்கு 5 சீட்
இந்த வேட்பாளர் பட்டியலில் தோழமை கட்சிகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வக்கீல்கள் அதிகம்
திமுக வேட்பாளர்களில் வக்கீல்கள் 13 பேர், டாக்டர்கள் 3 பேர், பொறியாளர் ஒருவர், மற்றவர்கள் பட்டதாரிகள்.
27 பேர் புதுமுகங்கள்
இதில் கடந்த முறை எம்.பி.யாக இருந்தவர்கள் 8 பேர். புதிதாக 27 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பெண்கள் 2 பேர்.
காங்கிரஸ் வருமா...
கேள்வி: உங்கள் கூட்டணியில் காங்கிரஸ் வந்தால் பரிசீலிப்பீர்களா? காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுமா?
பதில்: பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் நாங்கள் எந்த செய்தியையும் சொல்ல முடியாத அளவில் உள்ளோம்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகமோ...
கேள்வி: இளைஞர்களுக்கு இந்த பட்டியலில் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா?
பதில்: பட்டியல் உங்கள் கையில் உள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இடதுசாரிகளுக்கு ஸாரி சொல்ல மாட்டோம்
கேள்வி: இடதுசாரி கட்சிகள் உங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதா?
பதில்: வர வாய்ப்பு இல்லை என்று ஸாரி சொல்ல மாட்டோம்.
பேச்சு நடக்கிறதா
கேள்வி: கம்யூனிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கிறதா?
பதில்: இன்னும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. பத்திரிகை வாயிலாக வரக்கூடும் என்ற செய்திதான் தெரிகிறது.
மனதைப் புண்படுத்தாதீர்கள்
கேள்வி: மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து உள்ளாரே?
பதில்: இது தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு கூட்டம். தேவையற்ற கேள்விகளை கேட்டு என்னை புண்படுத்தாதீர்கள் என்றார் கருணாநிதி.
மோடி அலை ஏதும் வீசவில்லை
தமிழகத்தில் மோடி அலை வீசுகிறதா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, வங்காள வரிகுடா அலை தான் எனக்கு தெரிந்தது என்றார்.
மதச்சார்பற்ற அணியில்தான் இடம் பெறுவோம்
மோடி பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு, ஜனநாயக ரீதியிலான எங்கள் கட்சி, மதச்சார்பற்ற அணியில் தி.மு.க பங்கேற்கும். இதைத்தான் நாங்களும், எங்கள் அணியினரும் ஏற்போம். தனிப்பட்ட ஒருவரை ஆதரிப்பீர்களா என்று கேட்பது சரியில்லை. இவ்வாறு கேட்ட எனது மனதை புண்படுத்த வேண்டாம். மதச்சார்பற்ற ஒரு கட்சி இந்தியாவில் ஆளும் கட்சி வரவேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புவோம்.
2ஜி எல்லாம் பொய் வழக்குகள்..
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆ. ராசாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, 2ஜி வழக்குகள் ஆதாரம் இல்லாமல் ஆடி கொண்டிருக்கின்றன. நிரூபிக்க கூடிய சாட்சியங்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது என்றார்.
ஜெயலலிதா ஒருவர் போதாதா
தி.மு.க வேட்பாளர் பட்டியலில் 2 பெண்களுக்குத் தான் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, ஒரு பெண் இருந்தே (ஜெயலலிதா) நம்மை ஆட்டி வைக்கிறாரே.. அது போதாதா? என்று சிரித்தபடியே பதில் தந்தார்.
அம்மாதான் பொய் சொல்வார்
இட ஒதுக்கீடு விஷயத்தில் நீங்கள் பொய் சொல்வதாக ஜெயலலிதா கூறுகிறாரே? என்ற கேள்விக்கு, தேர்தலில் பொய் சொல்வது இந்த அம்மாவுக்கு கை வந்த கலை என்றார்.
ஜெ வழக்கு 15 வருடமாக நடக்கிறதே
மக்கள் நிர்வாகிகள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறதே என்று கேட்டதற்கு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏறத்தாழ 15 வருடமாக நடக்கிறது என்று பதிலளித்தார் கருணாநிதி.