ஆகாயப்பந்தலில் அதிசய திருமணம்… பலூனில் பறந்து மாலை மாற்றிய மணமக்கள்
சென்னை: ராட்சத பலூனில் பந்தல் அமைத்து அதில் திருமணம் நடத்தியுள்ளனர் திலீப் - சாந்தினி தம்பதியர். மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்த அதிசய திருமணம் பற்றிதான் பேசிவருகின்றனர்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக கூறுவார்கள். இங்கே சொர்க்கத்தின் அருகில் போய் திருமணம் நடத்திவிட்டு வந்துள்ளனர் இந்த புதுமணத் தம்பதியர்.
திருமணம் ஒரு சந்தோசத் திருநாள். எல்லோரது வாழ்விலும் மறக்க முடியாத அனுபவங்களை சுமந்து கொண்டிருக்கும்.
அதனால்தான் வசதி படைத்த பலர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவது மட்டுமல்லாமல் நடுக்கடலில்... நடுவானில்... என்று கற்பனையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் புது புதுவிதமாய் நடத்துகிறார்கள்.
அப்படி ஒரு அதிசய திருமணத்தை திலீப் - சாந்தினி தம்பதியருக்கு நடத்தி வைத்துள்ளனர் இருவரின் பெற்றோரும்.
நகை வியாபாரம்
திருவண்ணாமலையை சேர்ந்த வசந்தராஜ்-ராஜ் குமாரி தம்பதியின் மகன் திலீப் (23). புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ்-மஞ்சுளா தம்பதியின் மகள் சாந்தினி (22). இருவரும் மார்வாடி இனத்தை சேர்ந்தவர்கள், நகை வியாபாரம் செய்து வரும் வசதிபடைத்த குடும்பம். திலிப்-சாந்தினி திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.
அதிசய திருமணம்
சாந்தினியின் அண்ணன் வினோத்துக்கும் அப்படி ஒரு ஆசை. தன் ஆசை தங்கை திருமணத்தை எல்லோரும் வியக்கும் வண்ணம் அதிசயமாய் நடத்த முடிவு செய்தார்.
ஆகாயத்தில் பந்தல்
அதற்காக சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தை அணுகி ராட்சத பலூனில் ஆகாய பந்தல் அமைத்து அதில் திருமணம் நடத்த நினைக்கும் தனது ஆசையை வெளியிட்டார்.
அந்த நிறுவனமும் அதற்காக பிரமாண்டமான ராட்சத பலூனை தயார் செய்தது.
குதிரையில் ஊர்வலம்
திருமணத்துக்கு முந்தைய நாள் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக குதிரையில் மணப்பெண் சாந்தினியும், மணமகன் திலிப்பும் ஊர்வலமாக பூஞ்சேரியில் உள்ள மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆகாயத்தில் பந்தல்
மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ திரண்டு நின்றனர். மணமக்கள் கையில் மாலையை கொடுத்து பலூனின் கீழ் பாகத்தில் கட்டியிருந்த மணமேடை வடிவ பெட்டியில் அமர வைத்தனர்.
நடுவானில் திருமணம்
பலூன் நடுவானில் சென்றதும் இருவரும் மாலை மாற்றி கொள்ளும்படி அனுப்பி வைத்தனர். பலூன் உயரே உயரே பறந்து கொண்டிருந்தது. கீழே நின்றவர்கள் திறந்த விழி மூடாமல் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தார்கள்.
200 அடி உயரத்தில்
200 அடி உயரத்தில் பலூன் பறந்தபோது திடீரென்று பலூனையும், அதன் கீழ் தொங்கிய மணமேடையை சுற்றிலும் மின்விளக்குகள் எரிய விடப்பட்டது.
உற்சாகத்தில் மணமக்கள்
அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த ஆகாய பந்தலில் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சி பொங்க மாலை மாற்றிக்கொண்டனர்.அதன்பிறகு மெல்ல மெல்ல அந்த பலூனை கீழே இறக்கினார்கள்.
சொர்கத்தில் திருமணம்
அப்போது ஆகாயத்தில் இருந்து வண்ண விளக்குகள் மின்ன அலங்கார மேடை இறங்கி வருவதுபோல் இருந்தது.
ஆகாயத்தில் மாலை மாற்றியது பற்றி மணமக்கள் கூறும்போது, இது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இன்ப அதிர்ச்சி. சொர்க்க லோகத்தில் எங்கள் திருமணத்தை நடத்தியது போல் பிரமிப்பில் இருக்கிறோம்'' என்று கூறி வருகின்றனர் மணமக்கள்.