திருச்செந்தூர் அருகே 81 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின- 45 பரிதாபமாக உயிரிழப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடற்கரையோரம் 81 ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இவற்றில் 45 பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த திமிங்கலங்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் மனிதர்களைப் போலவே நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும். இவற்றால் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருக்க முடியும்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆழந்தலை கடற்கரை பகுதியில் சுமார் 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட 81 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் டிஜிபி ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் திமிங்கலங்களை கடலுக்குள் திருப்பி விடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பெரும்பாலான திமிங்கலங்கள் மணற்பரப்புக்கே திரும்பி வந்துவிட்டன.
45 திமிங்கிலங்கள் இறப்பு
இப்படி கடற்கரையில் கரை ஒதுங்கிய 45 சிறிய வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. இந்த உயிரிழந்த திமிங்கலங்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
WATCH: Around 50 Small Fin Whales beached in Tuticorin in Tamil Nadu since last evening, number of them deadhttps://t.co/lyC7aMDZxv
— ANI (@ANI_news) January 12, 2016
இந்த உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் அவை புதைக்கப்பட உள்ளன. கூடங்குளம் அணு உலை கழிவுகள், ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகியவற்றால் திமிங்கலங்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.