கடவுள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்: தாலிபான் தாக்குதல் பற்றி குஷ்பு, மாதவன், சோனா
சென்னை: கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக பாகிஸ்தானில் நடந்த தாலிபான் தாக்குதல் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியை தாலிபான்கள் தாக்கினர். பள்ளிக்குள் அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை பள்ளிக் குழந்தைகள் 100 பேர் உள்பட 126 பேர் பலியாகியுள்ளனர். 122 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும் பள்ளிக்குள் பதுங்கியிருக்கும் 6 தீவிரவாதிகளில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து நடிகைகள் குஷ்பு, சோனாக்ஷி சின்ஹா, நடிகர் மாதவன் ஆகியோர் தங்கள் ஆதங்கத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை
கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் 100 குழந்தைகள் உயிருடன் எரிந்து போனபோதே எனக்கு கடவுள் மீதான நம்பிக்கை போய்விட்டது. தற்போது நடந்துள்ளதை பார்த்து கடவுள் மீதான நம்பிக்கையை மீண்டும் இழந்துவிட்டேன் என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
மதம்
அப்பாவிகளை கொலை செய்ய எந்த ஒரு மதமும் யாருக்கும் உரிமை அளிக்கவில்லை. இது மதநம்பிக்கைக்கு எதிரான செயல் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி
கடவுளே, இந்த உலகில் என்ன நடக்கிறது. இது போன்ற நேரங்களில் மனிதநேயத்தை கேள்வி கேட்க வைக்கிறது. பெஷாவரில் நடப்பது பற்றி அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சோனாக்ஷி ட்வீட் செய்துள்ளார்.
தீவிரவாதம்
தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடவுள் என்பதே கிடையாது. இந்த இக்கட்டான நிலையில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.
மாதவன்
யார் இவர்கள் எல்லாம். எங்கிருந்து வந்தார்கள். அவர்களின் குடும்பம், வளர்ப்பு என்ன. அவர்களை எது குழந்தைகளை கொல்லத் தூண்டியது என்று மாதவன் ட்வீட் செய்துள்ளார்.