நாமக்கல் தேமுதிக வேட்பாளார் உடல்நிலை மோசத்திற்கு என்ன காரணம்?
நாமக்கல்: நாமக்கல் தேமுதிக வேட்பாளர் திடீரென்று தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தே.மு.தி.கவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாமக்கல், திருச்சி, மதுரை, திருவள்ளூர், வடசென்னை ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு கட்சியின் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நல்லதம்பியின் மகனுமான என்.மகேஸ்வரன் அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் மகேஸ் வரன் பங்கேற்றார். இந்த நிலையில், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை சிகிச்சைக்காக அவர் சேர்ந்துள்ளார். அங்கிருந்தபடியே நேற்று நாமக்கல் மாவட்ட செயலாளர் சம்பத்குமாரை தொடர்புகொண்டுள்ளார் மகேஸ்வரன்.
அப்போது, மகேஸ்வரனின் செல்போனிலிருந்து பேசிய ஒருவர் தன்னை கோவை மருத்துவமனையிலுள்ள ஒரு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்றும், இப்போது மகேஸ்வரன் தன்னுடைய மருத்துவமனையில் தான் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளதாகவும், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அவரால் இப்போது யாருடனும் பேசமுடியாது, இன்னும் ஒரு மாதம் இங்கு உள் நோயாளியாக தங்கி சிகிச்சை எடுக்கவேண்டும், இந்த தகவலை உங்களிடம் மட்டும் சொல்லும்படி சொல்லியுள்ளார், நீங்கள் இந்த தகவலை அவரது வீட்டுக்கும், நண்பர்களுக்கும் சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
தேமுதிக வேட்பாளர் திடீரென தேர்தலில் போட்டியிட மறுப்புத் தெரிவித்திருப்பது அந்தக் கட்சியினரிடையே மட்டுமன்றி, நாமக்கல் மக்களவைத் தொகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தோல்வி பயம் காரணமாகவே அவர் விலகுவதாக அறிவித்திருக்கக் கூடும் என்று மற்ற கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மகேஸ்வரனின் தந்தை நல்லதம்பி நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, மகேஸ்வரனுக்கு ஓராண்டுக்கு முன் முதுகுத் தண்டுவடம் வைராஸால் பாதிக்கப்பட்டு, மூளையையும் பாதித்தது. தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக எந்த பிரச்னையும் இல்லாததால், தேமுதிக சார்பில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்தார். அவரது மனுவைப் பரிசீலித்த கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை மகேஸ்வரனுக்கு லேசான தலைவலி ஏற்பட்டது. தொடர்ந்து, கோவை மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு, அவரை உடனடியாக உள்நோயாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும், சுமார் ஒரு மாதம் அவர் வெளியில் அலையக் கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால், வேறுவழியின்றி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இப்போது கோவையில் சிகிச்சை பெற்று வரும் மகேஸ்வரன், ஓரிரு நாள்களுக்கு பிறகு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார் என்றார்.