சின்னத்துக்காக போராடியவர்கள் ஆர். கே நகரில் வெல்ல என்னவெல்லாம் பண்ணுவார்களோ.. மலைப்பில் மக்கள்!
சின்னத்துக்காக இத்தனை கடுமையாக போராடியவர்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் வெல்வதற்கு என்னவெல்லாம் செய்வார்களோ என்று இப்பவே மக்கள் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
சென்னை: முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக கடுமையாக போராடிய அதிமுகவினர் அடுத்து ஆர்.கே. நகரில் வெற்றி பெறுவதற்காக என்னவெல்லாம் செய்வார்களோ என்று இப்பவே மக்கள் கவலை கொள்ள தொடங்கிவிட்டனர்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு அதிமுகவின் இரு அணிகளும் உரிமை கோரியதால் சின்னம் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முடக்கப்பட்டது. இதனிடையே ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் விளையாடியதால் தேர்தலை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தற்போது அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையாக இணைந்துவிட்டதால் சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது.
இரட்டை இலை யாருக்கு
இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் எடப்பாடி - பன்னீர் அணிக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் வழங்கியது. இரட்டை இலையை இத்தனை போராட்டங்களுக்கு பிறகு இந்த அணியினர் பெற்றனர். இந்நிலையில் அடுத்த மாதத்தில் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
வெற்றிக்கு பாடுபடுவது
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை கெத்தாக வாங்கி கொண்ட எடப்பாடி அணியினர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற என்னவெல்லாம் செய்ய போகிறார்களோ என்ற அச்சம் இப்போதே மக்களுக்கு வந்துவிட்டது. தங்களுடைய இருப்பை காட்டி கொள்ள அந்த தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
இரட்டை இலை சின்னம்
கடந்த 1996-இல் நடைபெற்ற தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்காக கடுமையாக போட்டியிட்டு வீர வசனங்களை பேசிவிட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் அது நிச்சயம் அதிமுகவுக்கு அவமானமாக கருதப்படும். எனவே இந்த தேர்தலில் மானத்தை காப்பதற்காகவும் போராடி சின்னத்தை வென்றதற்கு ஒரு காரணம் கற்பிப்பதற்காகவும் இவர்கள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பணம் விளையாடும்
இதனால் இந்த தேர்தலில் கண்டமேனிக்கு பணம் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுக மீது மக்களுக்கு எத்தனை வெறுப்புகள் இருந்தாலும் இடைத்தேர்தல் என்கிறபோது அதிமுகவே ஜெயிக்கும் என்பது தெரிந்த கதைதான். இருந்தாலும் அவர்களை மண்ணை கவ்வ வைக்க மற்ற கட்சிகளும் "கடுமையாக" போராடும்.
ஆளும்கட்சியும் மக்களிடம் உள்ள தங்கள் பலத்தை காண்பிக்க அந்த தொகுதியை கைப்பற்ற நினைக்கும். "திருமங்கலம்" வெல்லுமா? அல்லது ஜனநாயகம் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.