ஆட்சியில் பங்கு கேட்போம்... ராகுல்காந்தியை முதல்வராக்குவோம்... இளங்கோவன் சொன்னது என்னாச்சு
சென்னை: சட்டசபைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் ஆட்சியில் பங்குகேட்போம் என்று கடந்த ஒரு வருடமாகவே கூறி வந்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இப்போது திமுக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி என்பது இப்போது முடிவாகியுள்ள நிலையில் ஆட்சியில் பங்கு என்பது பற்றி குலாம் நபி ஆசாத்தோடு கூட போன ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ மூச்சு கூட விட வில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் படு பரபரப்பை எட்டியுள்ளது. எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சகோதரத்துவம் முறையில் கூட்டணிகளை ஏற்படுத்துவோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த காலங்களில் கூறி வந்த போது எடக்கு மடக்காகவே பேசி வந்தார் ஈ.வி. கே.எஸ் இளங்கோவன்.
எங்களுடைய நிபந்தனையை ஏற்காத எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறி வந்தார் ஈ.வி. கே.எஸ் இளங்கோவன், ஆட்சியில் பங்கு என்பதுதான் அவரது நிபந்தனையாக இருந்தது. .
ஆட்சியில் சமபங்கு
காங்கிரஸ் மீது நாற்காலியைப் போட்டு ஆட்சி செய்வதை இனியும் அனுமதிக்க மாட்டோம். ஆட்சியில் சமபங்கை கேட்டு வாங்குவோம்
துணை முதல்வர் பதவி
உங்களுக்கு முதல்வர் பதவி என்றால், எங்களுக்கு துணை முதல்வர் பதவி. நிதித்துறை உங்களுக்கு எனில் காவல்துறை எங்களுக்கு என்ற நிலைதான் இனி இருக்கும் என்றார்.
கை கொடுப்போம்
நட்பு கூட்டணி என்ற காலம் எல்லாம் இப்போது முடிந்து விட்டது. அதே நேரத்தில் மதசார்பின்மையை காப்பாற்றுவதற்காக நாங்கள் கைகொடுப்போம் என்றும் கூறி வந்தார்.
தனித்து போட்டி
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று கூறி வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில் ராகுல்காந்திதான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று திடீரென்று குண்டு போட்டார்.
ராகுல்காந்தி முதல்வர்
அதோடு நிறுத்தவில்லை, ராகுல் காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் விரும்புவதாகவும் கூறினார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
இந்நிலையில்தான் சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை. ஆட்சியில் பங்கு என்ற பேச்சே பேசப்படவில்லை என்பதுதான் முக்கிய அம்சம்.
ராகுல் கட்டளை
இன்றைய சூழ்நிலையில் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதை விட திமுக உடன் இணைந்து போட்டியிடுவதே நல்லது என்று ராகுல்காந்தி கூறியதாகவும், ஆட்சியில் பங்கு என்பது அவசியமில்லை என்றும் ராகுல்காந்தி கூறியதாலேயே திமுக உடன் இன்றைய பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு என்பது பற்றி காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
அப்போ அந்த துணை முதல்வர் பதவி, காவல்துறை அமைச்சர் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறி வந்ததெல்லாம் வெறும் கனவா போச்சே!